என்னது டாப்சிக்கு ரகசிய திருமணமா?.. 10 ஆண்டு காத்திருப்பாம்.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
சென்னை: டாப்சி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது ஆடுகளம். அந்தப் படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார். அதனால் முதல் படத்திலேயே கோலிவுட்டின் கவனம் பெற்ற டாப்சிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

தமிழில் டாப்சி: ஆடுகளம் படத்துக்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் யார் கண்பட்டதோ தெரியவில்லை டாப்சிக்கு பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக எதுவும் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் டாப்சி: சூழல் இப்படி இருக்க ஹிந்தி பக்கம் ஒதுங்கினார் டாப்சி. பேபி என்ற படத்தின் ஹிந்தியில் அறிமுகமான அவருக்கு பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம்தான் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. பிங்க் படத்துக்கு பிறகு ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பயோபிக்கில் டாப்சி: அவரது ஹிந்தி கரியரில் பிங்க் படத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது சபாஷ் மிது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தில் மிதாலி ராஜாக டாப்சி நடித்து பலரிடமும் அப்ளாஸை அள்ளினார். அவர் கடைசியாக டன்கி படத்தில் நடித்திருந்தார். ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து மீண்டும் டாப்சிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
காதல்: இதற்கிடையே டாப்சி முன்னால் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்துவருவதாக சொல்லப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து இரண்டு பேரும் காதலித்து வருகிறார்கள் என்றும்; விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்றும் பரபர தகவல் ஓடியது. ஆனால் நடிகை டாப்சியோ அதுகுறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம் காத்துவந்தார். ஒருகட்டத்தில் இந்த செய்தி பெரிதானதால் மௌனம் கலைத்த டாப்சி, எல்லோரிடமும் முறைப்படி அறிவித்துவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ரகசிய திருமணம்?: இந்நிலையில் டாப்சியும், மத்யாஸ் போவும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்றும்; சினிமாவில் பெரிதாக எந்த பிரபலத்துக்கும் டாப்சி அழைப்பு கொடுக்கவில்லை. ஏனெனில் தனது திருமணத்தை சிம்ப்பிளாகவும், பிரைவேசியுடனும் நடத்த அவர் முடிவு செய்திருந்தார் என்றும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. டாப்சிக்கு ரகசிய திருமணம் என்று கேள்விப்பட்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











