தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கையை தொடரலாம் ஆனால் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க செயலாளர் விஷால் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்து எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார். நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து,மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க பட வேண்டாம் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தனி நீதிபதி இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் நிர்வாகிகள் பதவி காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடிகர் சங்க பிரச்சனையில், தமிழக அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதாகவும் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் இந்த தேர்தலை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்..
எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் பதவி காலம் முடிந்த பின்பு முறையாக பொதுக்குழு கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்புதான் புதிதாக தேர்தல் நடைபெற்றது என்றும் அதுவும் நீதிமன்ற உத்தரவுபடி தான் தேர்தல் நடைபெற்றது என்றும் எனவே தனி நீதிபதி உத்தரவு குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேர்தல் தொடர்பான நடவடிக்கை தொடரலாம் அதேவேளையில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் உயர் நீதிமன்றம் ஒப்புதல் இன்றி வெளியிடக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழக்கு விசாரணை அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று மதியம் இந்த வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக அனைத்து மனுக்களும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











