விவசாயத்தை அழித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாட்டையடியாக வரும் 'தெரு நாய்கள்'!
'இயற்கைக்கும் மக்கள் வாழ்வாதாரங்களுக்கும் பேராபத்து விளைவிக்கும் மொத்த திட்டங்களையும் தமிழகத்தின் பக்கம் தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது மத்திய அரசு' என்ற தமிழ் ஆர்வலர்களின் குற்றச்சாட்டை மெய்யாக்குவது போலவே மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
குறிப்பாக மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றை எவ்வளவோ எதிர்த்தாலும், மைய அரசு அசைந்து கொடுக்க மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.

நிஜத்தில் நடக்கும் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து 'தெரு நாய்கள்' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி உள்ளார் ஹரி உத்ரா என்ற புதிய இயக்குநர். பல கலை இயக்குநர்களுடன் உதவியாளராகப் பணிபுரிந்தவர் ஹரி உத்ரா.
அப்புக்குட்டி, பிரதிக், தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அக்ஷ்தா என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். ஹரிஷ், சதீஷ் ஆகியோர் இணைந்து இசையமைக்க, தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன் என்ற நிறுவனம் சார்பில் சுசில்குமார், உஷா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குநர் ஹரி உத்ரா கூறுகையில், "அரசாங்கமும், கார்ப்ரேட் நிறுவனங்களும் சேர்ந்து விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றி வருகின்றன. எரிவாயு எடுக்கிறோம் என்று கூறி மக்கள் வாழ்வாதரத்தை அடியோடு அழிக்கும் முயற்சி இது.
இதை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கதையின் நாயகர்கள்தான்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குறிவைத்து தாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படமாக இது இருக்கும். ஆனால், இப்படத்தில் எந்த தனிப்பட்ட கம்பெனியையும், தனிப்பட்ட நபரையும் குறிவைத்து படமாக்கவில்லை. அரசியல்வாதிகளையும் குறிப்பிட்டுத் தாக்கவில்லை.
இந்தத் தலைப்பை வைக்கும்போதே, இதற்கு நிச்சயம் எதிர்க் கருத்து வரும் என எனக்கும் தெரியும். ஆனால் படம் பார்த்த பிறகு அது எந்த அளவு பொருத்தமானது என்பது உங்களுக்கே புரியும்," என்றார்.
படம் முழுக்க தஞ்சை, மன்னார்குடி பகுதியிலேயே எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











