அடக்கடவுளே.. என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் இசையுலகம்!
சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
சுதேசி தமிழ்ப் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாக்கியம்மா மறைவு
ஒப்பாரி பாடல்களுக்காக பிரபலமானவர் பாடகி பாக்கியம்மா. என்ஜாய் எஞ்சாமி பாடலில் சில வரிகளை பாடியும் ஆடியும் இருந்த அவர் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. "என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை" வரிகளை இவர் பாடியிருப்பார்.

சீக்கிரம் போயிட்டீங்களே பாட்டி
பல இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீ இரங்கல்
என்ஜாய் எஞ்சாமி பாடலை சமீபத்தில் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற பாடகி தீ இப்படியொரு பாரம்பரிய இசை கலைஞர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஒட்டுமொத்த என்ஜாய் எஞ்சாமி குழுவினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

276 மில்லியன்
மூன்று மாதங்களுக்கு முன்னதாக பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு குரலில் வெளியான என்ஜாய் எஞ்சாமி சுதேசி பாடல் இதுவரை 276 மில்லியன் பார்வைகளை கடந்து உலகளவில் வைரலாகி உள்ளது. நியூயார்க் நகர பில் போர்டுகளில் சமீபத்தில் இந்த பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் குறித்த விளம்பரங்கள் அரங்கேறியிருந்தன.


Click it and Unblock the Notifications











