லைகா நிறுவனத்தை சுத்துப் போட்டு காலி பண்ண 4 இயக்குநர்கள்.. அதுல பெரிய சம்பவம் பண்ணதே ஷங்கர் தான்!
சென்னை: 2014ம் ஆண்டு விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் லைகா தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தது. கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வடச்சென்னை, 2.0, வந்தா ராஜாவாதான் வருவேன், காப்பான், தர்பார், மாஃபியா: சாப்டர் 1, டான், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என பல பெரிய படங்களை தயாரித்த லைகா கடந்த வாரம் வெளியான இந்தியன் 2 படத்தையும் தயாரித்தது.
லைகா தயாரிப்பில் வெளியான படங்களில் வெற்றிப் பெற்ற படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒரு சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்று லைகா நிறுவனத்துக்கு லாபத்தை கொடுத்துள்ளன.

ஆனால், பல முன்னணி இயக்குநர்களையும் நடிகர்களையும் நம்பி பல கோடி ரூபாய் முதல் போட்ட லைகா நிறுவனம் பட்டை நாமம் போட்டு தயாரிப்பு நிறுவனத்தையே மூடும் நிலைமைக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். அதற்கு முக்கிய காரணமே இந்த 4 இயக்குநர்கள் தான் என கோலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
மணிரத்னம்: பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் அதுவரை லைகா நிறுவனம் சந்திக்காத மிகப்பெரிய லாபத்தை லைகா நிறுவனத்துக்கு பெற்றுத் தந்ததே இயக்குநர் மணிரத்னம் தான் என்கின்றனர். குறைவான பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் 500 கோடி ரூபாய் வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸில் வந்தது. ஆனால், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் அதற்கு எதிர்மாறாக சொதப்பிய நிலையில், மிகப்பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்தித்ததாக கூறுகின்றனர். முதல் பாகத்தின் வசூலையும் ஹைப் ஏற்றுவதற்காகவே அதிகப்படுத்தி சொன்னதாகவும் இண்டஸ்ட்ரியில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
பி. வாசு: ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குநர் நான் என கெத்தாக சந்திரமுகி 2 படத்தை இயக்குகிறேன் என லைகாவை மூளை சலவை செய்த பி. வாசு அந்த படத்தில் முந்தைய பாக நடிகர்கள் அனைவரையும் மாற்றி விட்டு ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், கங்கனா ரனாவத் என ஏகப்பட்ட நடிகர்களையும் அவர்களுக்கான சம்பளத்தையும் கொடுத்து கடைசியில் கிண்டிக் கொடுத்த உப்புமாவை பார்த்து விட்டு ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். லைகாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அந்த படம் கொடுத்தது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இந்த ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து நானும் படம் எடுக்க வருகிறேன் என விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோவாக அப்பா ரஜினிகாந்தை மும்பை டான் மொய்தீன் பாயாக நடிக்க வைத்து மொக்கைப் போட்டு விட்டார். ஹார்ட் டிஸ்க்கே காணோம் என்றதும் காடுவெட்டி, ஹரா உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களை கூட வாங்கி வெளியிடும் ஓடிடி நிறுவனங்கள் இன்னமும் லைகா தயாரித்த லால் சலாம் படத்தை வாங்க முன் வரவில்லை.

ஃபர்னிச்சரை உடைத்த ஷங்கர்: 2.0 படத்திலேயே அதிக பட்ஜெட்டை இழுத்து விட்டாலும், ஓரளவுக்கு வசூல் ரீதியாக படம் வெற்றிப் பெற்று பெரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாத நிலையை கொடுத்த ஷங்கரை நம்பி இந்தியன் 2 படத்தில் இறங்கிய லைகாவுக்கு இப்படியொரு பலத்த அடியை ஷங்கர் கொடுத்து டோட்டலாக காலி செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இவர்கள் காப்பாற்றுவார்களா?: ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் தான் லைகா நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











