டிவி நிகழ்ச்சியில் நீங்களான்னு கிண்டல் செய்தார்கள்..அது எனக்கு மிகப்பெரிய ப்ரமோஷன் ஆனது..கமல் பேச்சு
விக்ரம் 100 வது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கமல்ஹாசன் பேசியபோது பல சம்பவங்களை குறிப்பிட்டார்.
தனது படத்துக்கு மிகப்பெரிய ப்ரமோஷன் பிக்பாஸ் மூலம் கிடைத்தது என கமல்ஹாசன் தெரிவித்தார்.
சின்னத்திரைக்கு ஏன் போகிறீர்கள் என என்னை கேட்டார்கள், ஆனால் அது எனக்கு மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைந்தது என்று கமல் பேசினார்.

பிக்பாஸை வழி நடத்தும் மூத்த கலைஞர்கள் கமல், மோகன்லால்
உலகம் முழுவதும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிலும் கொடுவரப்பட்டது. முதன் முதலில் இந்தியில் 15 ஆண்டுகளுக்கு முன் வந்தது. மிகுந்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாள சானல்களிலும் அந்தந்த மொழிகளில் ஒளிபரப்பானது. இதில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ், மலையாள பிக்பாஸுக்கு உண்டு. இந்த இரண்டு பிக்பாஸையும் வழி நடத்துபவர்கள் கமல்ஹாசன், மோகன்லால். இருவரும் மூத்த கலைஞர்கள். அனுபவமிக்கவர்கள். அதிலும் கமல்ஹாசன் ஒரு ஆசான் போல் பிக்பாஸை வழி நடத்துகிறார்.

தமிழ் பிக்பாஸில் ஒழுக்கக்குறைவை அனுமதிக்க மாட்டேன் - கமல்
பிக்பாஸ் இந்தி மற்றும் தெலுங்கில் ஆபாசம், ஒழுங்கீனம் காரணமாக பலமுறை போட்டியாளர்கள் கண்டிக்கப்பட்டுள்ளனர், வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கும் தமிழில் மகத்-யாஷிகா போன்றோரும், வேறு சில சீசன்களில் சில போட்டியாளர்களும் ஒழுங்கீனமாக நடக்க முயன்ற போது இது இந்தி பிக்பாஸ் அல்ல. இது தமிழ் பிக்பாஸ் இங்கு சில ஒழுக்க நடைமுறைகள் உள்ளன, அதை கட்டாயம் பின்பற்றியே தீரவேண்டும். பிக்பாஸை பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கிறார்கள். நமது செயல்பாடுகள் ஒழுக்கமாக இல்லாவிட்டால் அதை அவர்கள் பின்பற்ற நேரிடும், அதை அனுமதிக்க முடியாது என்று கமல் கண்டிஷனாக கூறிவிட்டார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள், பொதுமக்களுக்கு நல்ல மெசேஜை தரும் கமல்
கமல்ஹாசன் 6 வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடுமையான கொரோனா பேரிடரின் இரண்டு ஆண்டுகள், பொதுமக்கள் இல்லாமலேயே நடத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கமலையும் பிரித்து பார்க்க முடியாது, அந்த அளவு கமல்ஹாசன் பங்கேற்பதால் நிகழ்ச்சி நெறிப்படுத்தப்படுகிறது. பல சரியான மெசேஜ்கள் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கிடைக்கிறது. ஆனால் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது மார்க்கெட் போய்விட்டது அதனால் டிவிக்கு வந்துவிட்டார் என்று பலர் பேசினார்கள். ஆனால் கமல் அதைக் கண்டுக்கொள்ளவில்லை.

சின்னத்திரைக்கு வந்தது இழுக்கான ஒன்று அல்ல முன்னேற்றமே அடித்துச் சொன்ன கமல்
இதுகுறித்து நேற்று நடந்த விக்ரம் 100 வது நாள் விழாவில் கமல் பேசினார். அப்போது அவர் பிக்பாஸ் எப்படி ப்ரமோஷனுக்கு உதவியாக இருந்தது என்று பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் டிவி நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது என்னை சிலர் கேட்டார்கள். என்ன சின்னத்திரைக்கு செல்கிறீர்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் நான் இறங்கியதால் எனக்கு மிகப்பெரிய பிரமோஷன் கிடைத்தது. எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பிரமோஷன் பிக் பாஸில் கிடைத்தது என்று சொல்லலாம். அன்று மட்டும் என்னை தடுத்தவர்கள் பேச்சை கேட்டு ஒருவேளை நான் தயங்கி அதையே முடிவாக எடுத்து இருந்தால் இப்படிப்பட்ட வெற்றி எல்லாம் கிடைத்திருக்காது.

கௌரவம் பார்க்காமல் உண்மையை உடைத்த கமல்
விக்ரம் படத்துக்கு மிகப்பெரிய பிரமோஷன் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று சொல்லலாம். நம்ம கமல் புதிய படம் நடிக்கிறார் என்றெல்லாம் கடைகோடி மக்கள் வரை தெரிந்து ஆதரிக்க வாய்ப்பாக அமைந்தது அந்த நிகழ்ச்சி என பிக்பாஸ் தனக்கு கொடுத்த விளம்பரத்தை மிகப்பெரிய நடிகர் என்கிற மமதை இல்லாமல் வெளிப்படையாக பேசினார் கமல்ஹாசன். பிக்பாஸால் கமலுக்கு விளம்பரமா? கமல்ஹாசனால் பிக்பாஸுக்கு விளம்பரமா என்பது கோழி, முட்டை கால விவாதம் தான். ஆனால் பெருந்தன்மையுடன் கமல் பேசியது மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











