பிரசாந்துக்கு பெண் பார்த்து வருகிறோம்.. கோர்த்துவிட்ட கே.எஸ். ரவிக்குமார்.. தியாகராஜன் நச் பதில்!
சென்னை: பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளதாகவும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் என சுதந்திர தினத்தன்று போஸ்டர் எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பிரசாந்த் இன்று நடைபெற்ற அந்தகன் வெற்றி விழா மேடையில் வெட்கப்பட்டு பிரியா ஆனந்த் பின்னாடி ஒளிந்துக் கொண்ட காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளன.
தமிழ் சினிமா ரசிகர்களால் டாப் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் பிரசாந்த் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த நிலையில், அந்தகன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

அந்தகன் படத்தை தயாரித்து இயக்கியுள்ள தியாகராஜன் அடுத்ததாக பட வேலைகளை எல்லாம் நிறுத்தி விட்டு தனது மகன் பிரசாந்துக்கு பெண் தேடி திருமணம் செய்வது தான் முதல் வேலை எனக் கூறியுள்ளார்.
அந்தகன் வெற்றி விழா: படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடாமல் ஒரு வாரம் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இன்று வெற்றி விழாவை ஏற்பாடு செய்து அமர்க்களப்படுத்தியிருந்தார் தியாகராஜன். பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த அந்தகன் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்தகன் வசூல்: தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வெளியான அந்தகன் திரைப்படம் முதல் நாளில் வெறும் 65 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில், படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஒரு வாரத்தில் 5 முதல் 6 கோடி ரூபாய் வரை அந்தகன் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாந்த் தொடர்ந்து டாப் இயக்குநர்கள் படங்களில் நடித்து மீண்டும் தனது பாக்ஸ் ஆபிஸ் இடத்தை பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோட் படத்தில்: தளபதி விஜய் நடித்துள்ள கோட் படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் எப்படி நடித்துள்ளார் என்பது நாளை வெளியாகவுள்ள டிரெய்லரில் தெரியவரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து பல படங்களில் நடிக்கப் போவதாகவும் நல்ல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் பிரசாந்த் கூறியுள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் கேள்வி: அந்தகன் படம் வெற்றிப் பெற்றால் பிரசாந்த் திருமண பேச்சை எடுக்கிறேன் என சொன்னீர்கள், பிரசாந்துக்கு எப்போ சார் திருமணம் செய்வீர்கள் என கே.எஸ். ரவிக்குமார் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக் முன்னாடி ஓபனாகவே கேட்டு விட்டார்.
அடுத்த வேலையே அதான்: உடனடியாக மைக்கை பிடித்த தியாகராஜன் தனக்கும் தன் மனைவிக்கும் ஒவ்வொரு நாளும் வலியை கொடுக்கும் விஷயமே பிரசாந்தின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையே என்பது தான். அந்தகன் பட வேலைகள் முடிந்த நிலையில், அடுத்த பட வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்ல பெண்ணை பார்த்து பிரசாந்துக்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது அடுத்த வேலையே என தியாகராஜன் சொல்லி விட்டார்.
வெட்கப்பட்ட பிரசாந்த்: நடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்பவரை 2005ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில் 2009ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர், சினிமாவிலும் பிரசாந்தால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. 51 வயதாகும் நடிகர் பிரசாந்த் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா சொன்னதை கேட்டதும் பிரியா ஆனந்த் பின்னாடி அவர் வெட்கப்பட்டு நின்ற காட்சிகளும் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











