53 வருடங்களை கடந்தும் பேச வைத்த தில்லானா மோகனாம்பாள்...இசை, நடனத்தின் அடையாளம்
சென்னை : எவர் க்ரீன் சூப்பர்ஹிட் படமான தில்லானா மோகனாம்பாள் படம் 1968 ம் ஆண்டு, ஜுலை 27 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
நாதஸ்வர வித்வானான சண்முகசுந்தரத்திற்கும், பரதநாட்டிய கலைஞரான மோகனாவிற்கு இடையேயான காதல், மோதல் போன்றவற்றை கூறிய படம் தான் தில்லானா மோகனாம்பாள். இதில் சண்முக சுந்தரமாக சிவாஜி கணேசனும், மோகனாவாக பத்மினியும் வாழ்ந்திருப்பார்கள்.
இவர்களுடன் மனோரமா, நாகேஷ், டி.எஸ்.பாலைய்யா, ஏ.வி.எம்.ராஜன், நம்பியார், தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.பி.நாகராஜன் இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசையில் 8 பாடல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

175 நாட்கள் ஓடிய படம்
அந்த காலத்திலேயே தொடர்ந்து 175 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம் இது. இசை, நடனம், நடிப்பு, காமெடி என அனைத்து வகையிலும் மக்களின் மனம் கவர்ந்த படமாக அமைந்த தில்லானா மோகனாம்பாள் படம் 2 தேசிய விருதுகளையும், 5 தமிழக அரசு விருதுகளையும் வென்றுள்ளது.

நாவல் தான் படமானதா
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற நாவலை மையமாகக் கொண்டது தான் இந்த படம். முதலில் இந்த நாவலின் உரிமத்தை வைத்திருந்த எஸ்.எஸ்.வாசன், இந்த கதையை சினிமாவாக இயக்க ஏ.பி.நாகராஜனுக்கு அனுமதி அளிக்க இரண்டு முறை மறுத்துவிட்டார்.

மூன்றாவது முறை வென்ற நாகராஜன்
இந்த படத்தை ஜெமினி ஸ்டூடியோஸ் பேனரில் தான் தயாரிக்க வாசன் திட்டமிட்டிருந்தார். இருந்து விடாமல் முயற்சித்த ஏ.பி.நாகராஜன் மூன்றாவது முறையாக கேட்ட போது, படம் இயக்கும் உரிமத்தை அவருக்கு அளித்துள்ளார் வாசன். இதையடுத்து ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் பேனரில் நாகராஜன் தயாரித்தார்.

11 பக்கம் விமர்சனமா
ஈஸ்ட்மேன் கலர்லேப் ஒளிப்பதிவு செய்த இந்த படம் தஞ்சாவூர், திருவாரூர், மதுரை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடர் கதையாக வந்த தில்லானா மோகனாம்பாள் நாவல், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சினிமாவாக்கப்பட்டது. இந்த படம் ரிலீசான போது ஆனந்த விகடன் பத்திரிக்கையில் 11 பக்கத்திற்கு விமர்சனம் எழுதப்பட்டது.

மறக்க முடியுமா நலந்தானாவை
கண்ணதாசனின் வரிகளில் பாடல்கள் அமைக்கப்பட்டது. நலந்தானா, மறைந்திருந்து பார்க்கும் போன்ற பாடல்கள் இப்போதும் பலரின் ஃபேவரைட் பாடல்கள். இந்த படத்தில் நாதஸ்வர கலைஞராக நடிப்பதற்காக சிவாஜி பல கர்நாடக இசைக்கச்சேரிகளுக்கு சென்று அவர்களின் பாடி மேனலிசத்தை கற்றுக் கொண்டார். பாலைய்யா போன்றோருக்கு தவில் வாசிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

டிஜிட்டலுக்கு மாறிய மோகனாம்பாள்
உலகம் முழுவதும் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்ட இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இசை, இசை கலைஞர்கள், பரதநாட்டியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படங்கள் உருவாக முன்னோடியாக அமைந்த படமும் இது தான். 2010 ல் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட தில்லானா மோகனாம்பாள் படம் தென்னிந்திய திரைப்பட சங்க தியேட்டரில் திரையிடப்பட்டது.

இப்பவும் வெளிநாடுகளில் ஒலிக்கும் தில்லானா
2011 ல் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சந்திரமுகி, சிவாஜி, அங்காடி தெரு, பாஸ் என்கிற பாஸ்கரன், தென்மேற்கு பருவக்காற்று, கோ ஆகிய படங்களுடன் தில்லானா மோகனாம்பாள் படமும் திரையிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











