தில்லு முல்லு விவகாரம்... டீல் முடிஞ்சி போச்சு... கேஸ் வாபஸ்!
தமிழ் சினிமாவில் புதிதாக கதைக்கோ, படத்தின் தலைப்புக்கோ மண்டையை குழப்பி யோசிப்பதை விட்டு விட்டு பழைய படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இதன் விளைவு கோர்ட் கேஸ் என்று அழைந்து பின்னர் ஒருவழியாக டீல் பேசி பைசல் செய்து கொள்கின்றனர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா பட விவகாரம் இன்னமும் பிரச்சினையில் உள்ளது. இந்த நிலையில் ரஜினியின் தில்லுமுல்லு பட ரீமேக்கிற்கும் அதே சிக்கல் ஏற்பட்டது. தில்லுமுல்லு உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு, இப்போது கோர்ட்டுக்கு வெளியே டீல் முடிக்கப்பட்டதில் வாபஸ் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் மீசை தான் கதை
ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் தில்லு முல்லு. கே.பாலச்சந்தர் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினி, முதல்தடவையாக மீசை இல்லாமல் நடித்தார். இந்த மீசையை வைத்துதான் முழு கதையே நகர்ந்தது.

சிவாவின் புதிய தில்லுமுல்லு
தற்போது சிவா, இஷா தல்வர், பிரகாஷ் ராஜ் நடிக்க அதே பெயரில் ரீமேக் ஆகிறது புதிய தில்லுமுல்லு. வேந்தர் மூவிஸ் தயாரிக்க, பத்ரி இயக்குகிறார். பிரம்மாண்டமான அறிவிப்போடு பூஜை போடப்பட்டது.

வழக்கு தொடர்ந்த ஒரிஜினல்
தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வதை எதிர்த்து கலாகேந்திரா நிறுவன உரிமையாளர் விஜயலட்சுமி சென்னை 13-வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். "தில்லு முல்லு படத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. எங்களிடம் அனுமதி பெறாமல் இப்படத்தை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" என்றும் மனுவில் கோரி இருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரூ.24 லட்சம் சமரசம்
இந்த நிலையில் இருதரப்புக்கும் இடையே தற்போது சமரசம் ஏற்பட்டு உள்ளது. விஜயலட்சுமிக்கு ரூ.24 லட்சம் கொடுத்து தில்லு முல்லு படத்தின் ரீமேக் உரிமையை வேந்தர் மூவீஸ் வாங்கியுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இருவரும் கையெழுத்திட்டனர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக வக்கீல் ஆனந்த் கூறினார்.
அடடா, படத்துக்கு பப்பிளிசிட்டி போச்சே!


Click it and Unblock the Notifications











