வடமாநில இளைஞரை வெட்டிய சிறுவர்கள்.. மாரி செல்வராஜ் கொந்தளிப்பு.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
சென்னை: திருத்தணியில் ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி நான்கு சிறுவர்கள் அரிவாளால் வெட்டி வீசிவிட்டு சென்ற சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வெட்டுப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த சம்பவம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
'வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு' என்ற கூற்று கடந்த பல வருடங்களாக புழக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டில் அரங்கேறும் காட்சிகள் அந்த கூற்றுக்கு வலுவை குறைத்துவருகின்றன. தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வடமாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டுக்கு வந்து கிடைக்கும் வேலைகளை செய்துவருகிறார்கள். ஆனால் பஞ்சு மிட்டாய் விற்பவர், பானி பூரி விற்பவர் என பலரையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வார்த்தைகளாலும், தாக்குதல் நடத்தியும் கொடுமை செய்கிறார்கள் சிலர்.
திருத்தணியில் நடந்த கொடூரம்: அந்தவகையில் திருத்தணியிலும் ஒரு கொடூரம் நடந்திருக்கிறது. அதாவது மின்சார ரயிலில் அமர்ந்திருந்த வடமாநில இளைஞர் ஒருவரிடம், கஞ்சா போதையில் நான்கு சிறுவர்கள் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி அத்து மீற; அதை அந்த இளைஞர் விரும்பவில்லை. அதனையடுத்து போதையில் இருந்த நான்கு பேரும் ரயில் நின்ற பிறகு அவரை இழுத்து ஆள் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று சரமாரியாக வெட்டினார்கள். வெட்டுவதையும் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் அதிர்ச்சி: உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அந்த இளைஞரை மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இவ்விஷயம் தெரிந்த பிறகு போதை சிறுவர்கள் நான்கு பேரையும் கைது செய்தார்கள் காவல் துறையினர். தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவருவதாகவும், போதை கலாசாரம் அளவுக்கு மீறி பெருகிவிட்டது என்ற விமர்சனங்கள் வலுத்திருக்கின்றன.
மாரி செல்வராஜ் ட்வீட்: இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை மின்சார இரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு விளக்கம்: இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி விளக்கமளித்திருக்கும் தமிழ்நாடு அரசு, ' பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு உதவியும் செய்யப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பான வீடியோவை சோஷியல் மீடியாக்களில் பகிரப்படுவதை நிறுத்த வேண்டும். வீடியோவை பகிர்ந்தால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படும்' என குறிப்பிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











