தமிழ் சினிமாவில் ‘திருவிளையாடல்’ படம் ஏற்படுத்திய அதிர்வுகள்: ஒலிச்சித்திரமாகவும் செய்த மாயங்கள்
சென்னை: 'திருவிளையாடல்' படம் திரைக்கு வந்து இன்றுடன் 57 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள் நடித்திருந்தனர்.
இதில் ஏ.பி.நாகராஜன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று சொல்லும் நக்கீரர் வேடத்தில் தோன்றினார்.

திருவிளையாடல் ஆரம்பம்
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காவியங்களில் 'திருவிளையாடல்' படமும் ஒன்று. இயக்குநர் ஏபி நாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கூட்டணியில் தூள் கிளப்பிய இந்தப் படத்தில், சிவாஜிக்கு இணையாக நாகேஷும் கலக்கியிருப்பார். படத்தின் பெரும்பலமே வசனங்கள் தான், இப்போதும் அதன் பிரகாசம் குறையாமல் இருக்கின்றன. சிவாஜியின் உச்சரிப்பில் 'திருவிளையாடல்' படத்தின் வசனங்கள், ரசிகர்களை சிலிர்க்க வைத்தன.

நாடகக் கம்பெனியில் வளர்ந்த நட்பு
திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏபி நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே அது. சின்ன வயதிலேயே அப்பா, அம்மா அடுத்தடுத்து இறந்துவிட, அவரது பாட்டி நாடகக் கம்பெனியில் சேர்த்து விடுகிறார். பல நாடகக் கம்பெனிகளில் வேலைப் பார்த்த ஏபி நாகராஜன், சக்தி நாடக சபாவுக்கு மாறியபோது, அங்கு சிவாஜி கணேசனுடன் நட்பு ஏற்படுகிறது. .

புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம்
புராண கதைகளுக்கு தமிழ்நாட்டில் நல்ல மவுசு இருப்பதை அனுபவப்பூர்வமாக புரிந்து கொண்ட ஏபி நாகராஜன், அந்த நம்பிக்கையில் திருவிளையாடல் படத்தை இயக்குகிறார். சிவாஜியும் இந்த முயற்சியில் நம்பிக்கையுடன் தனது நடிப்பை வெளிப்படுத்த, படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. குறிப்பாக திருவிளையாடல் தருமிக்கும், கவியாக வரும் சிவாஜிக்கும் இடையில் நடக்கும் கேள்விப் பதில் சொற்போர் ரசிகர்களை மிரள வைத்தது.

எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட்
சிவாஜியும் ஏபி நாகராஜனும் எதிர்பார்க்காத வகையில் 'திருவிளையாடல்' படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ஏ.பி.நாகராஜன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரர் வேடத்தில் தோன்றி ஜமாய்த்தார். படத்தில் இடம்பெற்ற வசனங்கள் எல்லாம், ரசிகர்களிடம் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. அதுமட்டும் அல்லாமல், தமிழ் சினிமாவிலும் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தி அசரடித்தது.

ஒலிச்சித்திரத்தில் திருவிளையாடல்
'திருவிளையாடல்' படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்புக்கு கொஞ்சமும் குறையில்லாமல், இன்னொரு வடிவத்திலும் வெற்றி வாகை சூடியது. அப்போதெல்லாம் திருமணங்கள், கோயில் திருவிழாக்களில் திரைப்படங்களின் வசனங்களை மட்டும் ஒலிச்சித்திரமாக ஒலிக்கவிடுவது வழக்கம். படம் வெளியான 1965ம் ஆண்டு முதல், 90களின் இறுதி வரையிலும் 'திருவிளையாடல்' படத்தின் ஒலிச்சித்திரத்தை பல இடங்களிலும் கேட்க முடியும்.
Recommended Video

என்றும் நிலைத்திருக்கும்
காட்சிகள் இல்லையென்றாலும் நச்சென்ற வசனங்களால் ஒலிச்சித்திரமாகவும் ரசிகர்களின் மனதில் ஊடுருவிய திரைப்படம் தான் 'திருவிளையாடல்.' காலங்கள் கடந்தாலும், திருவிளையாடல் படத்தின் ஒலிச்சித்திரத்தை என்கேனும் கேட்க நேரிடுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். 'திருவிளையாடல்' படத்திற்கான இந்த வரவேற்பு இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் நீடித்து நிற்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.


Click it and Unblock the Notifications











