'விவேகம்' டெக்னாலஜிக்குப் பின்னாடி இருக்கும் பிக்பாஸ் இவர்தான்!
சென்னை : இயக்குநர் சிவா- நடிகர் அஜித்தின் மூன்றாவது கூட்டணியில் பிரம்மாண்டமாகத் தயாராகி வெளியானது 'விவேகம்'. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் செம்ம வசூல் செய்து வருகிறது.
'விவேகம்' படத்திற்கு பல விஷயங்கள் பலமாக இருந்தாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த முக்கியமான விஷயம் அதில் பயன்படுத்தப்பட்டிருந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள்தான்.
இப்படி ஒரு பிரம்மாண்ட படத்திற்குத் திரைக்கதை அமைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனெனில் படத்தில் கதையைத் தாண்டி நமக்கு பல டெக்னாலஜிகளையும் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுவரை அறிந்திராத தொழில்நுட்பங்கள் :
மோர்ஸ் கோடு, புளூட்டோனியம் வெப்பன்ஸ், ரிவர்ஸ் ஹேக்கிங், எலக்ட்ரானிக்ஸ் லென்ஸ், தெர்மல் இமேஜிங், சீக்ரெட் சொசைட்டி, விர்ச்சுவல் ஹோலோகிராம் போன்ற விஷயங்களை படம் பார்க்கும் பலர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். இதைச் சரியாக மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதே சமயம் இந்தத் தொழில்நுட்பங்கள் கதைக்குள் பயணிப்பதாகவும் இருக்க வேண்டும்.

டெக்னாலஜிக்குப் பின்னாடி இருக்கும் 'பிக்பாஸ்' :
கேள்விப்பட்டிராத டெக்னாலஜிகளை பக்காவாக திரைக்கதையிலும் வசனத்திலும் புகுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி இருக்கிறார் கபிலன் வைரமுத்து. இவர் இந்த படத்திற்குத் திரைக்கதை அமைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் படத்தில் இவருடைய பங்கு அதிகம் என்றே சொல்லலாம். அதுவும் திரைக்கதையில் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே இந்தளவுக்குப் பேசப்படுகிறார்.

சும்மாவா வந்துச்சு :
கபிலன் வைரமுத்து மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் மாஸ் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' படத்திற்கு கதை வசனம் மற்றும் பாடல்களையும் எழுதியிருக்கிறார். டெக்னாலஜி தொடர்பான விஷயங்களைப் பாடல்களில் பயன்படுத்துவதில் வைரமுத்து குடும்பமே முன்னோடி.

பாடலாசிரியர் :
விவேகம் படத்தின் 'காதலாட...' பாடல் இவரது கைவண்ணத்தில் உருவானதே. இதுவரை 15 படங்களுக்கும் மேல் பாடல்வரிகளை எழுதியிருக்கிறார் கபிலன். இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசராகப் பணியாற்றி வருகிறார். இந்த கேப்பில் அடித்த சிக்ஸர்தான் இதுவும்.

இன்றைய தலைமுறையின் அடையாளம் :
விவேகம் படம் குறித்து அவர் கூறுகையில், 'விவேகம் படத்திற்கு பொதுமக்கள் தரும் பாராட்டும் வரவேற்பும் நிறைவு தருகிறது. இந்தப் படத்தில் இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் இன்றைய தலைமுறையின் அடையாளங்கள்.' என்கிறார்.

பொறுங்கப்பா :
'விமர்சனம் செய்யும் சில நண்பர்கள் முதல்நாளே விமர்சிக்க வேண்டுமென அவசர அவசரமாக எதையும் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறார்கள். நிதானமாகப் படத்தைப் பார்த்துவிட்டு நிறை குறைகளை தெளிவாக வெளிப்படுத்தும் விமர்சனங்கள் எங்கள் உழைப்புக்கான அங்கீகாரமாகவும் இருக்கும். எங்கள் பணிகளை மேம்படுத்தவும் அது உதவும்.' எனக் கூறியிருக்கிறார் கபிலன்.


Click it and Unblock the Notifications











