பிளாஷ்பேக்: விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஹீரோ ஆக இருந்த காமெடியன்.. நம்பவே முடியல இல்ல
சென்னை: சினிமா உலகம் ஆச்சரிய விஷயங்களின் அதிசயம். ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஓராயிரம் ஆச்சரியங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
இவருக்காக உருவாக்கப்பட்ட கதையில் அவர் நடிப்பதும் அவருக்கான உருவாக்கப்பட்ட கதையில் இவர் நடிப்பதும் சினிமாவில் சகஜம்.
இதற்கு பல படங்கள் உதாரணமாக காணக் கிடைக்கிறது. அப்படி ஒரு மாற்றம் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான, துள்ளாத மனமும் துள்ளும் படத்துக்கும் நடந்திருக்கிறது.

துள்ளாத மனமும்
விஜய், சிம்ரன் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம், துள்ளாத மனமும் துள்ளும். இயக்குனர் எழிலுக்கு முதல் படம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மைல்கல் என்பார்கள். மணிவண்ணன், தாமு, வையாபுரி, மதன்பாப், பொன்னம்பலம், பாரி வெங்கட் என பெரிய நட்சத்திர லிஸ்ட்.

ருக்குவும் குட்டியும்
குட்டி என்ற கலக்கலான கேரக்டரில் நடித்திருப்பார், விஜய். கல்லூரிப் பெண்ணாகவும், பார்வை இழந்தவராகவும் ருக்கு என்ற கேரக்டரில் சிம்ரன். ருக்குவும் குட்டியும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்த பெயர்கள். அதோடு இந்தப் படத்தின் பாடல்களும். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் இதன் ஒவ்வொரு பாடலும் படத்துக்கு உயிரூட்டின.

காற்றுக்கு உருவமில்லை
அதிலும், 'இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை.. காற்றலை இல்லை என்றால்..' எனத் தொடங்கும் அந்தப் பாடல்தான் கடைசியில் காதலர்களையும் ஒன்றும் சேர்க்கும். தொடத் தொட எனவே, இருபது கோடி, மேகமாய் வந்துபோகிறேன் ஆகிய பாடல்களில் மெலடியில் உருக வைத்திருப்பார், எஸ்.ஏ.ராஜ்குமார்.

சிலிர்ப்பாக முடித்திருப்பார்
அந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்து பஸ் ஸ்டான்டில் நின்றால் கூட, டீ கடைகளில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டிருக்க முடியும். அவ்வளவு பிரபலம். படத்தின் கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை படபடக்க வைத்து, படத்தை சிலிர்ப்பாக முடித்திருப்பார், இயக்குனர் எழில். விஜய், சிம்ரன் நடிப்பு படத்துக்குப் பெரிய பலம்.

வைகைப்புயல்தான்
விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் மறக்க முடியாதது, துள்ளாத மனமும் துள்ளும். இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்று தெரிந்தால், உண்மையிலே ஆச்சரியப் படுவீர்கள். நம்பவே முடியவில்லை என்பீர்கள். உண்மைதான், இதில் நடிக்க இருந்தது, நம்ம வைகைப்புயல் வடிவேலு! அவர் ஜோடியாக நடிக்க இருந்தது ஊர்வசி.

ருக்மணிக்காக
படத்துக்கு, 'ருக்மணிக்காக' என்று டைட்டில் வைத்திருந்தார்கள். பிறகு இதில் முரளி, விஜயகாந்த் ஆகியோர் நடிக்க இருந்தனர். படத்தை ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பதாக முடிவானதும் அப்போது பிசியாக இருந்த விஜய் ஹீரோவானார். ஹீரோயினாக ரம்பா முடிவு செய்யப்பட்டு இருந்தார். பிறகுதான் சிம்ரன் வந்தார். கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரானது படம்.

நுவ்வு வஸ்தாவனி
ஆரவாரமின்றி வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர் படத்தை. இதையடுத்து கன்னடத்தில் வி.ரவிச்சந்திரன், இஷா கோபிகர் நடிக்க, ஒ நன்னா நல்லே என்ற பெயரிலும் தெலுங்கு நாகார்ஜுனா நடிக்க நுவ்வு வஸ்தாவனி என்ற பெயரிலும் போஜ்புரி, ஒடியா உள்பட மேலும் சில மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











