RRR படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்த பின்னணி தெரியுமா..? அன்றே கணித்த மலையாள சினிமா!
சென்னை: சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 95வது ஆஸ்கர் விருது விழா இன்று (மார்ச் 13) காலை நடந்து முடிந்தது.
இதில் இந்தியாவில் இருந்து ஆர்ஆர்ஆர் படத்திற்கும், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றிருந்த நாட்டு நாட்டு பாடல், தற்போது ஆஸ்கரையும் தட்டிச் சென்றது.
இந்நிலையில். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர்
95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இதில், ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் பாடல், தற்போது ஆஸ்கரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருதின் பின்னணி
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியா சார்பில் தேர்வு செய்யப்படாத ஆர்ஆர்ஆர் படத்தை, தயாரிப்பு தரப்பினர் தனியாக ஆஸ்கருக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி மொத்தம் 15 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட ஆர்ஆர்ஆர், இறுதியாக ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. முன்னதாக ஆஸ்கர் விருது வெல்வதற்காக இயக்குநர் ராஜமெளலி உட்பட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் 80 கோடி வரை பணம் செலவழித்ததாக செய்திகள் வெளியாகின.

மார்க்கெட்டிங் தான் முக்கியம்
ஆஸ்கர் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படக்குழு பல கோடி ரூபாய் செலவு செய்ததாக வெளியான தகவல்களை படக்குழுவினரும் மறுத்திருந்தனர். ஆனால், திரை வல்லுநர்களும் சினிமா விமர்சகர்களும் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்ததன் பின்னணியில் மிகப் பெரிய மார்க்கெட்டிங் நடந்துள்ளது என குறிப்பிடுகின்றனர். ஆஸ்கர் விருதிற்காக நடத்தப்படும் வாக்கெடுப்புக்கு முன்னர், படக்குழுவினர் சார்பில் பலமுறை சிறப்பு காட்சிகள் போட்டுக் காட்டப்பட வேண்டும். அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்தால் மட்டுமே சாத்தியம் என சொல்லப்படுகிறது.

And the Oscar Goes To...
2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான And the Oscar Goes To... என்ற திரைப்படம் இந்த மார்க்கெட்டிங் குறித்து பேசியது. ஆதமிண்டே மகன் அபு என்ற படத்தின் இயக்குநர் சலீம் அஹமது தான் And the Oscar Goes To... படத்தையும் இயக்கியிருந்தார். டொவினோ தாமஸ், அனு சித்தாரா, சலீம் குமார், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையின் படி, இசாக் இப்ராஹிம் என்ற கேரக்டரில் நடித்த டொவினோ தாமஸ் ஒரு படம் இயக்குவார். அது தேசிய விருதை வெல்வதுடன் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்படும்.

பணம் இல்லையென்றால் விருது கிடையாது
ஆஸ்கர் விருது வென்றுவிடலாம் என்ற கனவோடு அமெரிக்கா செல்லும் டொவினோ தாமஸ், தனது படத்தை ப்ரோமோஷன் செய்யவும் மார்க்கெட்டிங் பண்ணவும் பணம் இல்லாமல் விரக்தியில் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிவிடுவார். இது இயக்குநர் சலீம் அஹமது தனது முதல் படமான ஆதமிண்டே மகன் அபு ஆஸ்கர் விழாவுக்கு சென்றபோது கிடைத்த அனுபவமாக இருக்கலாம். அதையே And the Oscar Goes To... என்ற டைட்டிலில் படமாக எடுத்திருந்தார். ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவே பரிந்துரை செய்திருந்தாலும் அங்கே வாக்கெடுப்புகளில் வெற்றிப் பெற பணம் வேண்டும் என்பதே உண்மை. 1200 கோடிக்கும் மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கருக்காக 100 கோடி செலவழிப்பது ஒன்றும் பெரிய தொகை இல்லை தான். இந்த கருத்தையே தற்போது சினிமா விமர்சகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











