நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.. கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்!
சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவர் கணவர் கைது செய்யப்பட்டது ஏன் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி ஓட்டல் அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதிவு திருமணம்
இதுபற்றி நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

உடலில் காயங்கள்
சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத், ஓட்டலில் வெளியில் இருந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் ஹேம்நாத்துக்கும் சித்ராவுக்கும் சண்டை நடந்து அதனால், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை செய்துவந்தனர்.

ஆஜராக உத்தரவு
இந்நிலையில் சித்ராவின் தற்கொலை பற்றி ஹேம்நாத் மற்றும் சித்ரா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாய் காரணமில்லை
அதன்படி சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா உட்பட உறவினர்கள் வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தனித்தனியாக விசாரணை செய்தார். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாய் விஜயா, 'எந்த ஒரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக மாட்டார். சித்ரா தற்கொலைக்கு ஹேம்நாத் காரணம். அந்த விவரங்களை ஆர்.டி.ஓ. விசாரணையில் கூறியுள்ளோம் என்றார்.

ஹேம்நாத் கைது
இந்நிலையில், ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று ஆர்டிஓ விசாரணை நடைபெற இருந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத்தை கைது செய்தனர். அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

நடத்தையில் சந்தேகம்
ஹேம்நாத், சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











