Malavika: சினிமாவை விட்டு போவேனு நினைக்கவே இல்ல.. ஆனால், மாளவிகா வேதனை!
சென்னை: மாடல் அழகியான மாளவிகா தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை முதன் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.
முதல் படத்திலேயே அஜித்திற்கு ஜோடியாக நடித்து பெயர் எடுத்த மாளவிகா, அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடி கட்டு, ஐயா, சந்திரமுகி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் வாய்ப்பு சரியாக அமையாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழில், சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு சீ யூ எட் 9 என்ற படத்தில் நடித்தார்.

மும்பையில் செட்டில்: சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த திரைப்படத்தை அடுத்து ஜீவாவுடன் திருட்டுபயலே திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து 2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

காரணம் இதுதான்: தற்போது, இவர், இயக்குனர் பொன் சரவணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஜீவா, தன்யா ஹோப், பாயல் ராஜ்புட் நடித்துள்ள படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள மாளவிகா,சினிமாவில் இருந்து ஒதுங்கியது குறித்து பேசி உள்ளார். சிறுவயதில் இருந்தே சினிமா மீது எனக்கு காதல் இருந்ததால், மாடலிங்கில் விளம்பர படத்தில் நடித்தேன். அதன் பின், படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவில்லை. திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் கமிட் ஆகியிருந்தேன். அப்போது நான் கர்ப்பமாக இருந்ததால், படங்களில் நடிக்க முடியாது என்று உறுதி செய்து வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். இதனால் தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்று நடிகை மாளவிகா கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











