Ajith : சர்ச்சையான மேடை பேச்சு.. ரஜினி கொடுத்த அட்வைஸ்.. பேட்டி கொடுப்பதை நிறுத்திய அஜித்!
சென்னை : படங்களில் பிஸியாக நடித்து வரும் அஜித்குமார், பேட்டி மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதற்கு காரணம் இதுதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தை அலறவிட்டு வருகின்றனர்.
அஜித் 62 : அஜித்தின் பிறந்த நாளான இன்று ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அஜித்தின் 62 படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித்தின் முந்தைய படங்களைப் போல இப்படத்திற்கும் வி சென்டிமென்டுடன் விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

இதுதான் காரணம் : அஜித்தின் பிறந்த நாளான இன்று சோஷியல் மீடியா முழுவதும் அஜித்தின் செய்தியே ஆக்கிரமித்து உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் அஜித் அஜித் என அவரது ரசிகர்கள் இணையத்தையே இரண்டாக்கி வருகின்றனர். இதனால், ஊடகங்களும் அஜித் குறித்த பல சுவாரசியமான தகவல்களை தேடி தேடி பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் அஜித், பேட்டி மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அரசியல் நிகழ்ச்சி : அஜித் சினிமாவில் நுழைந்த போது, பத்திரிக்கையாளர்களிடம் நட்பாக பழகி உள்ளார். அவர் பல பேட்டிகளை கொடுத்து இருக்கிறார். பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி, இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி போன்றவற்றில் தவறாமல் கலந்து கொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞருக்காக பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பல முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சர்ச்சை பேச்சு : இந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித், 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே என்று பேசினார். பின், சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கிறார்கள். எங்களுக்கு அரசியல் வேண்டாம், யாரும் எங்களை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சிக்கு அழைக்கக்கூடாது என்று நீங்கள் தான் உத்தரவிட வேண்டும் என்றார். அஜித்தின் இந்த பேச்சுக்கு ரஜினி எழுந்து நின்று கைத்தட்டினார்.

ஜெயலலிதா விசுவாசியா : கலைஞர் பாராட்டுவிழாவில் அஜித் இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜித் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்து பத்திரிக்கையில் அவர் குறித்து படுமோசமான விமர்சனங்கள் எழுந்தன. அஜித் ஜெயலலிதா விசுவாசி என்ற விமர்சனமும் எழுந்தன. இதையடுத்து, அஜித் கலைஞரை சந்தித்து பேசியதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.
ரஜினி கொடுத்த அட்வைஸ் : இதையடுத்து, ரஜினிகாந்த் அஜித்தை தொலைபேசியில் அழைத்து, பேட்டி, பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை குறைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். அதற்குப் பிறகு தான் அஜித் பேட்டி கொடுப்பது, பொது நிகழ்ச்சிக்கு வருவது, ப்ரோமோஷனுக்கு வருவதை நிறுத்திக்கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications