ரஜினி சொன்ன அந்த அசாதாரண சூழ்நிலை இதுதான்!
சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகக் கருத்து தெரிவித்தார்.
அவ்வளவுதான்... அடுத்த சில நிமிடங்களில் ஆளாளுக்கு பொங்கித் தீர்த்தனர். சசிகலாவை சந்தித்து வந்த நடிகர் சரத்குமார், 'ரஜினி இதையெல்லாம் பேசத் தகுதியற்றவர்... அவர் கட்சி ஆரம்பித்தால் அல்லது அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்பேன்,' என்றார்.

மேடைக்கு மேடை 'தலைவா.. எப்போ அரசியலுக்கு வரப்போறீங்க' என்று ரஜினியை அழைத்து முழங்கி வந்த கருணாஸ், 'ரஜினி நான் அரசியலுக்கு அழைக்கவில்லை. அவர் கருத்து சொல்லத் தேவையில்லை,' என்றார்.
இன்னும் சிலரும் இதே மாதிரி பொங்கித் தீர்த்தார்கள். குறிப்பாக சமூக வலைத் தளப் போராளிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 20 ஆண்டுகால அரசியல் கூடத்தெரியாமல் இஷ்டத்துக்கும் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ரஜினி பேசியது துக்ளக் ஆண்டு விழாவில். அப்படி என்னதான் சொன்னார்:
"ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் சோ கண்டிப்பாக இங்கே இருந்திருக்க வேண்டும். இந்த மாதிரி அசாதாரண சூழ்நிலை நடப்பதை பார்க்கும் போது அவர் இல்லாததை நினைத்து மனசு கஷ்டப்படுகிறது.."
-இதுதான் அவர் சொன்னது.
இப்போது தமிழக அரசியலில் நடப்பது என்ன மாதிரி சூழ்நிலை?
இரும்புப் பெண்மணி, துணிச்சல் மிக்க தலைவர் எனப்பட்ட ஜெயலலிதா மறைந்துவிட்டார். அவரால் அடையாளம் காணப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தால் ஆட்சியைத் தொடர முடியவில்லை. பெரும்பான்மை அதிமுக உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவால் முதல்வர் பதவி ஏற்க முடியவில்லை. எல்லாவற்றையும் தலைநகரிலிருந்து தீர்த்து வைக்க வேண்டிய ஆளுநர் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு தரப்பை மட்டும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் என பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகள். தமிழகம் நிலைத்தன்மையற்ற ஆட்சியில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இதைத்தான் அசாதாரண சூழ் நிலை என்று கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பு சொன்னார் ரஜினி.


Click it and Unblock the Notifications











