'தர்மதேவதைக்கே அநீதியா'... திரையுலக உண்ணாவிரதம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னை: தர்மதேவதைக்கே அநீதியா? என்ற வாசகத்துடன் இன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவான தங்களின் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர் தமிழ் திரையுலகினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, பெங்களூர் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிரான தீர்ப்புக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலும் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தர்மதேவதை
அதில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. உண்ணாவிரதத்துக்கு காலை 8 மணிக்கே திரையுலகினர் வரத் தொடங்கினார்கள்.

டி சிவா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, "ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். புரட்சித் தலைவி அம்மா எல்லா சோதனைகளையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும்," என்றார்.

சரத்குமார்
பின்னர் உண்ணாவிரதம் துவங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், சரவணன், குண்டு கல்யாணம், மனோபாலா, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விக்ரமன்
இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, ஆதிராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப்ராகிம் ராவுத்தர், ராதாகிருஷ்ணன், கில்டு ஜாகுவார் தங்கம், சவுந்தர், சுப்பையா, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கில்..
மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியே நெரிசலில் திணறியது. மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. உண்ணாவிரதம் நடந்த பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ரத்து
உண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியிலும் சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன.

திரையரங்க உரிமையாளர்கள்
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று காலை தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் ஹரி கோவிந்த், லேனாசுப்பு, கஜேந்திரன், மனோகரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











