தெலுங்கானா ரணகளத்திலும் ஹைதராபாத் ரசிகர்களின் கிளுகிளுப்பு.. காஜலைப் பார்க்க ஒரே கூட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் ஒருபக்கம் பற்றி எரிந்தாலும் கூட நடிகை காஜல் அகர்வாலைப் பார்க்க ஹைதராபாத்தில் பெரும் கூட்டம் முண்டியடித்தது. கடைசியில் காஜலுக்கு சேதாரம் ஏற்பட்டு விடாமல் காக்கும் வகையில் போலீஸார் செல்லமாக தடியடி நடத்தி கிரவுடை கலைத்து விட்டனர்.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு வணிக வளாக திறப்பு விழாவில்தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது.
தமிழை விட தெலுங்கில்தான் தற்போது காஜல் அகர்வால் நிறைய நடித்து வருகிறார். அங்கு அவரது கவர்ச்சிக்கும், அழகுக்கும் நல்ல ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த வணிக வளாக திறப்பு விழாவுக்கு காஜலை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். போஸ்டர்கள் மூலம் செம விளம்பரமும் செய்திருந்தனர். இதனால் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு விட்டனர்.
பிரமாண்ட வெற்றிப் படமான மகாதீரா படத்தின் நாயகி என்பதால் காஜலுக்கு அங்கு நல்ல கிரேஸ்... காஜலைப் பார்க்க கால் கடுக்க காத்திருந்தனர் ரசிகர்கள். காஜலும் வந்தார்.. அவ்வளவுதான் ரசிகர்கள் அவரைப் பார்க்கவும், கை குலுக்கவும், ஆட்டோகிராப் கேட்கவும் மொய்த்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்தக் கூட்டத்தைப் பார்த்து காஜலுக்கே சற்று பீதியாகி விட்டது. ஏதாவது ரசாபாசமாகி விடக் கூடாதே என்ற பயத்தில போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்து விரட்டினர். அப்படியும் பலர் போகவில்லை.. காஜலைப் பார்க்கத் துடித்தனர். அவர்களை சிரமப்பட்டு நகர்த்தி வெளியேற்றினர் போலீஸார். இந்த பரபரப்பால் அங்கு போக்குவரத்தே பாதிக்கப்பட்டுப் போனது.
தெலுங்கானா பிரச்சினை ஒருபக்கம் வெடித்துக் கிளம்பி பதட்டத்தை ஏற்படுத்தினாலும் கூட அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பை நாடி வந்துள்ளனர் காஜல் ரசிகர்கள்.. அல்ல, அல்ல.. சினிமா ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications












