ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்வதுதான் தமிழகத்துக்கு நல்லது! - ரசிகர்கள் கோரிக்கை
சென்னை: தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நேற்று சென்னையில் கூடி கோரிக்கை வைத்தனர்.
ரஜினிகாந்த், 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் அனைத்து மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.
"ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அனைத்து ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். அவருடைய அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இன்றைய சூழலில் ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே அரசியல் தூய்மைப்படுத்தப்படும், தமிழகம் காக்கப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே விரைவில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்," என்று அவர்கள் பேசினார்கள்.
இதுகுறித்து இப்போது விவாதிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் கூறி, அமைதிப்படுத்தினர்.
இந்த கூட்டத்துக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபம் எதிரில் காலையில் இருந்தே திரண்டு நின்று 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் வாழ்க, வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க' என்று கோஷமிட்டபடி இருந்தனர். மன்றக் கொடிகள், ரஜினி பேனர்கள் என பக்கா அரசியல் செட்டப்புடன் நின்றிருந்தனர்.
ரசிகர்கள் கூட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டபத்தை சுற்றிலும் சென்னையின் பல பகுதிகளிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி ரசிகர்கள் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார்கள்.
ரசிகர்களை தான் சந்திப்பது அரசியல் நோக்கத்தில் அல்ல என்று ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தாலும், அரசியல் களத்தில் ஒரு பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்!


Click it and Unblock the Notifications











