வழக்கறிஞரை மிரட்டிய வழக்கில் பவர்ஸ்டாருக்கு முன்ஜாமீன்
மதுரை: வழக்கறிஞரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வழக்கறிஞர் பாண்டி என்பவரை மிரட்டியதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் பவர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி பவர் ஸ்டார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில் கூறியிருந்ததாவது,
திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டி என்பவர் என் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகி வருவதாகவும், இதற்கான கட்டணத்தை அவர் கேட்டதற்கு நான் கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் கூறும் வழக்கில் பெங்களூருவை சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். அதற்கான கட்டணத்தையும் நான் முறையாக செலுத்தி வருகிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வழக்கறிஞர் பாண்டி புகார் அளித்துள்ளார்.
இதில் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே மனுதாக்கல் செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் என் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. தற்போது மணப்பாறை போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் மணப்பாறை போலீசாருக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து தான் முன்ஜாமீன் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











