Exclusive: முன் இருக்கையை உதைத்து உதைத்து படம் பார்த்த அசோக் செல்வன்.. ரெய்டு விட்ட ரசிகர்.. இது எப்போ?
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் வளர்ந்து வரும் இளம் நடிகர். இளம் நடிகர் என்றாலும் தனது கதைத் தேர்வு மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் நல்ல அபிப்ராயத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். திரைத்துறையில் இவர் மீது சில கம்ப்ளைண்ட்கள் வைக்கப்பட்டாலும், அசோக் செல்வன் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே உள்ளார். இந்நிலையில் இவர், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடித்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புரோமோஷன் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்தவர், நமது டீமிற்கும் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பல சுவாரஸ்யமான எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது நமது டீமிற்கு சர்ப்ரைஸாக இருந்தது. அப்படி இருக்கும்போது அதை வாசகர்களுக்கு சொல்லாமல் இருக்க முடியுமா?
அசோக் செல்வன் தீவிரமான கமல்ஹாசன் ரசிகர் என்று தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார். மேலும், விஸ்வரூபம் படத்தின் பிரச்னையின் போது கமல்ஹாசன் வீட்டு வாசலில் திரண்டு அவருக்கு ஆதரவாக நின்றவர்களில் அசோக் செல்வனும் ஒருவர். அப்படியான அசோக் செல்வன் தனது சினிமாவின் ஆஸ்தான குரு கமல்ஹாசன் படத்தில், அவருடன் திரையை பகிர்ந்து கொள்கிறார் என்றால் அவருக்குள் எவ்வளவு சந்தோஷம் இருக்கும். ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் நம்மிடையே கொட்டியுள்ளார்.

விருமாண்டி: கமல்ஹாசன் குறித்து அவர் கூறுகையில் " நான் சிறுவயதில் இருந்தே வெறித்தனமான கமல்ஹாசன் ரசிகர். விருமாண்டி படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விருமாண்டி படத்தை நான் எனது மாமாவுடன் சேர்ந்து கமலா தியேட்டரில் பார்த்தேன். இப்போது அந்த படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் இப்போதும் அந்த படத்தை பார்த்துக் கொண்டு உள்ளேன்.
தெனாலி: கமல் சாரின் பல படங்களை இவ்வாறு வரிசைப்படுத்தலாம். தெனாலி படத்தில் மேலோட்டமாக பார்க்கும்போது காமெடி மட்டும் தான் தெரியும். ஆனால் அந்த படத்தை நன்கு கவனிக்கும் போது தான் அதில் உள்ள எமோஷன்ஸ் புரியும். இது மட்டும் இல்லாமல், அந்த படத்தில் நோயாளி மருத்துவரை குணப்படுத்துவது போன்ற திரைக்கதை அமைத்திருப்பார்கள். நான் தெனாலி படத்தை எனது அம்மாவுடன் தியேட்டரில் பார்த்தேன். அப்போது நான் ரொம்பவும் சின்ன பையன். ஆனால் படத்தைப் பார்க்க பார்க்க என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ரெய்டு விட்ட ரசிகர்: தியேட்டரில் எங்களுக்கு முன்னால் இருந்த இருக்கையை உதைத்து உதைத்து சிரித்து அந்த படத்தை பார்த்தேன். ஒரு கட்டத்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவர் எழுந்து எனது அம்மாவை நோக்கி, " என்னம்மா புள்ள வளர்த்து வெச்சு இருக்கீங்க" என்று திட்ட ஆரம்பித்துவிட்டார்" என்று கூறினார். அசோக் செல்வன் இவ்வாறு கூறும் போது, அவர் சினிமாவுக்குள் வர கமல்ஹாசன் ரசிகரானவர் அல்ல, கமல்ஹாசன் ரசிகராக இருந்ததால்தான் சினிமாவிற்குள் வந்துள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. படம் வெற்றியடைய வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு நமது டீம் அவருக்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications











