Thug Life: மொழிப்பிரச்னை.. பதிலடியில் பஞ்ச்.. கமல் சொல்வது புரியலையா? இல்லை புரிந்து கொள்ள மறுக்கிறார்களா?
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் தற்போது ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது. அதாவது இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசுகையில் தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என்று கூறினார். இது வரலாற்று ரீதியாக உண்மை என்றாலும் கமல்ஹாசன் பேசும்போது கன்னட மொழியை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பேசவில்லை என்பது அவர் பேசியதை பார்க்கும் போதே தெரிகிறது.
இப்படியான நிலையில், கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பினர் கமல்ஹாசன் கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் பேசுகிறார். கன்னட மொழியை சிறுமைப்படுத்த பேசுகிறார். கன்னட மக்களின் பணம் வேண்டும், அவரது படம் இங்கு வியாபாரம் ஆக வேண்டும் ஆனால் கன்னட மொழி குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை சொல்லுவாரா? கமல்ஹாசன் முகத்தில் கரியைப் பூச கூட நாங்கள் தயங்க மாட்டோம். அவரது படத்தை வெளியிட விட மாட்டோம் என்றெல்லாம் சொல்லி, தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கிழித்தார்கள்.

எதிர்ப்பு - ஆதரவு: இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் எதிராக கர்நாடகாவிலும் குரல்கள் எழுந்தது. குறிப்பாக இணையவாசிகள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டார்கள். இப்படியான நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா , கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், திராவிட மொழிகளில் தமிழ் தான் அனைத்திற்கும் தாய்மொழி. இதை இன்று சிலர் ஏற்க மறுக்கலாம். ஆனால் அதுதான் வரலாறு" என்று தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கேட்க முடியாது: இப்படியான நிலையில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கும் விதமாக, உலக நாயகன் கமல்ஹாசன் பேசுகையில் குறிப்பிட்டுள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்று தோன்றும். தென் குமரியில் இருந்து பார்த்தால் நான் சொல்வது சரி என்று தோன்றும். மொழி குறித்து அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் தான் விவாதிக்க தகுதியானவர்கள். மொழி குறித்த பேச்சினை அரசியலாக்க வேண்டாம். நான் சொன்னது அன்பின் வெளிப்பாடுதான். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது" என்று தெரிவித்தார்.

ஏற்க மறுப்பு: கமல்ஹாசனின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் கமல்ஹாசன் கூறியது வரலாற்று ரீதியான உண்மை. இதனை தமிழ் நாட்டினைச் சேர்ந்த மொழியியளார்கள் மட்டுமில்லாது வேற்று மொழியைச் சேர்ந்த வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் கூறியுள்ளார்கள். அதனை வரலாற்று ரீதியாகவும் நிரூபித்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத கன்னட அமைப்பினர், கமல்ஹாசன் பேசியதற்கு மட்டும் இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றும், கமல்ஹாசன் பேசுவது அவர்களுக்கு புரியவில்லையா அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்களா என்ற கேள்வியை பலரும் முன் வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











