சிஎம் ஆசையில தான் ஹீரோக்கள் சுத்திட்டு இருக்காங்க.. துணிவு படத்தில் நடித்த மோகனசுந்தரம் சாடல்!
சென்னை: துணிவு படத்தில் மைபா எனும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்த பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் மோகனசுந்தரம், பாரதி பாஸ்கர், ஆனந்தி, மெர்வின் மற்றும் விஜய் டிவி மகேஷ் உள்ளிட்ட பலர் பேச்சாளர்களாக களமிறங்கினர்.
சினிமாவின் வெற்றிக்கு காரணம் ஹீரோவா? இயக்குநரா? என்கிற தலைப்பில் இந்த பட்டிமன்றம் நடைபெற்றது.

துணிவு முதல் ஏகே 62 வரை
பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ஏகப்பட்ட பெரிய தமிழ் படங்கள் தொடங்கி இந்தியாவின் பல்வேறு மொழியில் வெளியாக உள்ள பல படங்களின் போஸ்ட் தியேட்டரிக்கல் உரிமத்தை வாங்கி உள்ளது. அஜித்தின் துணிவு முதல் ஏகே62 வரை நெட்பிளிக்ஸில் தான் வெளியாக உள்ளது. மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்களை இழந்து விட்ட நிலையில், இந்திய சந்தையை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது நெட்பிளிக்ஸ்.

பட்டிமன்றமும் வந்தாச்சு
சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பண்டிகை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெறும் பட்டிமன்றத்தையும் டார்கெட் செய்து தூக்கி உள்ளது நெட்பிளிக்ஸ். ராஜா தலைமையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு நடத்தப்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சியில் மோகனசுந்தரம் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஹீரோக்கள் தான்
சினிமாவின் வெற்றிக்கு ஹீரோக்கள் தான் காரணம். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய், தனுஷ் - சிம்பு என்று தான் சினிமாவின் காலகட்டத்தையே பிரிக்கின்றனர். யாராவது இயக்குநர்களின் பெயர்களை வைத்து காலகட்டத்தை பிரிக்கின்றனரா என்றும் குஷ்புவுக்குத் தான் கோயில் கட்டினார்கள். நடிகர்கள் சம்பளம் 100 கோடிக்கும் அதிகமாக செல்கிறது. படத்தின் வெற்றிக்கு காரணம் அவர்கள் தான் என்றும் அதனால் தான் அவர்களுக்கு அதிக சம்பளம் என்று பேசினார்.

எழுதினவங்கள பத்தி தெரியாது
நான் ஒரு தடவை சொன்னா என்றதுமே ரஜினி வசனம்னு தான் சொல்றோம், அதை எழுதினவனை பற்றிய கவலை யாருக்கும் இல்லை என பேசிய மோகனசுந்தரம் நடிகர்கள் சிஎம் ஆசையுடன் சுற்றித் திரிகின்றனர் என்றும் ஒரு சில நடிகர்கள் சிஎம் ஆகவே ஆகிவிட்டதையும் பார்த்து இருப்போம். நடிகர்களை தவிர மற்ற 23 டிபார்ட்மெண்ட்ல இருக்க ஒருத்தராச்சும் கவுன்சிலர் பதவிக்கு போட்டிப் போட்டு கூட ஜெயிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
சிஎம் ஆசையுடன்
இப்போ கூட நாலு, அஞ்சு நடிகர்கள் சிஎம் ஆசையுடன் தான் சுத்திட்டு இருக்கானுங்க என மோகனசுந்தரம் பேசியதும் அது எப்படி உங்களுக்கு தெரியும் என பட்டிமன்றத்தின் நடுவர் ராஜா குறுக்கிட அதுதான் நிறைய ஆடியோ லாஞ்ச் பார்க்கிறோம்ல என பேசிய வீடியோவை ஷேர் செய்து நடிகர் விஜய்யை துணிவு படத்தில் நடித்த மோகனசுந்தரம் தாக்கிப் பேசியுள்ளதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன.

துணிவு மைபா
நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் மைபா எனும் பத்திரிகையாளராக மோகனசுந்தரம் நடித்திருப்பார். அஜித், மஞ்சு வாரியரை தொடர்ந்து அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. அவர் பேசும் வசனங்களுக்கு எல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

ரசிகர்கள் கடுப்பு
இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்தில் நடித்த நிலையில், மோகனசுந்தரம் நடிகர் விஜய்யை தாக்கி பேசி உள்ளார் என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்ய விஜய் ரசிகர்கள் கடுப்பாகி மோகனசுந்தரத்தை கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். துணிவு படத்துக்கு பிறகு மோகனசுந்தரத்துக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வரும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











