twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பாக்கி... இன்னும் ஓயாத சர்ச்சை!

    By Shankar
    |

    Vijay
    தீபாவளிக்கு வெளியாகி, பெரும்பாலான தியேட்டர்களில் கடந்த மாதமே தூக்கப்பட்டுவிட்ட விஜய்யின் துப்பாக்கி பட சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

    இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கம் குறித்த வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் துப்பாக்கி படத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    அதில், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறேன். கடந்த நவம்பர் 13-ந் தேதி, கலைப்புலி தாணு தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி சினிமா படம் வெளியிடப்பட்டது. அதில் முஸ்லீம் மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த காட்சிகளால் மற்ற சமுதாயத்தினருக்கும், முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையே விரோத உணர்வு ஏற்படும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும். இந்தப் படத்துக்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இது, அரசியல் சாசனத்தின்படி தவறானதாகும். இந்த சினிமாவால் சமுதாய அமைதி கெட்டுவிடும். 'யூ' சான்றிதழை ரத்து செய்யும்படி, மத்திய அரசு, தணிக்கைத் துறை, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். எனது புகாரை பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.

    இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசுத் தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, கலைப்புலி தாணு தரப்பில் வக்கீல் மஞ்சுளா, மனுதாரர் தரப்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜரானார்கள்.

    இந்த வழக்கில் நேற்று நடந்த வாதங்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்...

    சங்கரசுப்பு (மனுதாரர் தரப்பு): துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் நிலையில் அதற்கு 'யூ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழை திரும்பப் பெறும்படி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இன்பதுரை (அரசு வழக்கறிஞர்): இந்த வழக்கில் தமிழக அரசு வாடிக்கையாக சேர்க்கப்பட்டுள்ளது.

    சங்கரசுப்பு: இந்த படத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழக அரசும் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும்.

    இன்பதுரை: துப்பாக்கிப் பட பிரச்சினை தொடர்பாக முஸ்லீம் சமுதாயத் தலைவர்கள் சிலர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, அந்த சினிமாவில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

    அதன்படி, அந்த படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. எனவே, அந்த சமுதாயத் தலைவர்கள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர் என்பதையும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

    நீதிபதிகள்: இந்த பிரச்சினையில் தயாரிப்பாளரின் கருத்து என்ன? ஏன் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை?

    மஞ்சுளா (தயாரிப்பாளர் தரப்பு): தயாரிப்பாளர் வெளிநாடு சென்றிருப்பதால் பதிலளிக்க முடியவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

    வாதம் முடிந்ததும், வழக்கை வரும் ஜனவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    English summary
    The case filed by Muslim League party man against Thuppakki m,ovie was adjourned to Jan 3rd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X