சிறு தயாரிப்பாளர்களை துன்புறுத்தும் ‘சென்சார்’..! துப்பார்க்கு துப்பாய பட இயக்குநர் கொதிப்பு
தணிக்கை குழுவில் இருப்பவர்கள் ஒவ்வொன்றிலும் இந்தியை புகுத்த முயலுவார்கள் என்று துப்பார்க்கு துப்பாய பட இயக்குநர் ராஜ ராஜ ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: விடிவெள்ளி வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் 'துப்பார்க்கு துப்பாய' என்ற திரைப்படத்தை ஜானகி தருமராசன் தயாரித்துள்ளார். மலேசியாவின் பிரபல நடிகர் விகடகவி மகேந்திரன், ஜோடி நம்பர் ஒன் ஆனந்தி, ரியா போன்றோர் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி இருக்கிறார், ராஜ ராஜ ராஜன்.
இந்த திரைப்படம் அண்மையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தணிக்கைத் துறையினர், அனைவரும் பார்க்க ஏற்றது என்பதை குறிக்கும் 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜ ராஜ ராஜன் தணிக்கைத் துறையினர் மீது பரபரப்பு புகார்களை கூறியுள்ளார்.

தணிக்கை துறையினரைக் கண்டித்து ராஜராஜன் விடுத்துள்ள அறிக்கை:
எங்கள் திரைப்படத்தை சில தினங்களுக்கு முன், தணிக்கைக் குழுவினருக்காக முன்னோட்ட அரங்கு ஒன்றில் திரையிட்டுக் காட்டினோம். தணிக்கை வாரியத்தின் மண்டல துணை அலுவலர் தலைமையில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் படத்தைப் பார்த்தனர். பின்னர், யு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால், மூன்று இடங்களில் ஒலி நிறுத்தம் அதாவது 'மியூட்' செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
அதில் முதல் இடம், 'காண்டு' என்ற சொல். படத்தின் ஒரு காட்சியில், கதாநாயகன் தனது நண்பரிடம் தன்னை கோபப்படுத்த வேண்டாம் என்பதை குறிக்கும் வகையில், வழக்கத்தில் உள்ள சொல்லான 'காண்டாக்காதே'என்பார்.
'காண்டு' என்ற சொல் ஹிந்தி மொழியில் 'பிட்டம்' என்று குறிக்குமென விளக்கம் சொன்ன தணிக்கை அதிகாரிகள், இந்திக்காரர்கள் பார்த்தால் தவறாகி விடும் என்பதால் அந்தச் சொல்லை நீக்க வேண்டும் என்றனர்.
'காண்டு' என்பது தமிழில் கோபம், துன்பம் போன்ற பொருளைத் தான் தரும் என்று விளக்கிய நாங்கள், அருணாச்சல பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சரின் பெயர் 'பெமா காண்டு' என்பதையும், அவரது தந்தையார் 'டார்ஜி காண்டு'வும் முதலமைச்சராக இருந்தவரே என்பதை குறிப்பிட்டோம்.
பூ என்பதை வட மொழியில் 'ஃபூல்' என்று சொல்வார்கள். அந்தச் சொல்லை நீக்கிவிட்டு போங்களேன் என்று பிடிவாதமான நிலைப்பாட்டை எடுத்தனர், தணிக்கைக் குழுவினர். படத்தின் ஒரு காட்சியில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முனையும் ஒருவனை எச்சரிக்கும் வகையில், நாயகி 'செருப்பால அடிப்பேன்' என்பார்.
இதில் வரும் 'செருப்பால' என்ற சொல்லை நீக்குக என்றனர். திரைத்துறையில் இதற்கு முன் வந்த எத்தனையோ படங்களில் செருப்பால அடிப்பேன் என்ற சொல் வந்திருப்பதை சுட்டிக்காட்டினோம். அதை ஏற்க மறுத்த தணிக்கைத் துறையினர், தங்களுக்கு வந்திருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஒரு பெண் ஆணை பொது இடத்தில் தரக்குறைவாக பேசக் கூடாது என்றனர்.
இது ஆணாதிக்கம் என்பதையும் தமக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டினோம். எமது வாதம் அவர்கள் செவியை எட்டவில்லை. அவர்களுக்கு வந்திருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதையாவது விளக்கமாகச் சொல்லச் சொன்னால், அதற்கும் பதிலில்லை. காரணம், அப்படி புதிய வழிகாட்டுதல் எதுவுமே இல்லை.


Click it and Unblock the Notifications











