கந்து வட்டியின் கோரப்பிடியைச் சொல்லும் 'துட்டு!'

பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே படங்களை இயக்கிய முரளிகிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார்.
தனிமனித வாழ்க்கையில் கந்து வட்டியின் கொடுமை பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது. ஏழ்மைச் சூழலை விரட்டியடிக்க கந்து வட்டிக்கு பணத்தை வாங்கி அதற்கு வட்டி கட்ட முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர்.
இப்படி கந்து வட்டியின் கோரப்பிடியை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து எடுத்திருக்கிறார்களாம் துட்டு படத்தில்.
இப்படத்தில் ஹீரோவாக வேலை எதுவும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெறுமனே ஊரைச் சுற்றித் திரியும் ஒரு சராசரி இளைஞனாக ஆரியன் ராஜேஷ் நடிக்கிறார்.
இவர் ஏற்கனவே தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். தமிழில் கவிதாலயா நிறுவனம் தயாரித்த 'ஆல்பம்' என்ற படத்தில் நடித்த ஆரியன் ராஜேஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது தமிழ்ப் படம் இது.
மும்பையைச் சேர்ந்த சோனா சோப்ரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சீதா, கோட்டா சீனிவாசராவ், கஞ்சாகருப்பு, மனோபாலா, டெல்லிகணேஷ், 'நந்தா'சரவணன், 'பெசன்ட்நகர்' ரவி, நெல்லை சிவா, 'மூணாறு' ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
முரளிகிருஷ்ணா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு முதல்முறையாக படத்தில் 4 பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
படத்தின் தயாரிப்பாளர் கோபால்ஜி சினிமாவுக்குள் வருவதற்கு முன்பாகவே ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர். இந்தப் படத்தை தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் படத்தில் சீதாவின் கணவராகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











