கத்தி பிரஸ் மீட்டில் 'தீவிரவாதிகளா'?! -பலத்த போலீஸ் காவல், சோதனை!!
சென்னை: இன்று நடந்த கத்தி பிரஸ் மீட்டில் நிருபர்களை பலத்த சோதனை போட்ட பிறகே போலீசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
வருகிறவர் நிருபரா, ஏதாவது கலாட்டா செய்ய வந்த 'தமிழ் தீவிரவாதியா' என்ற சந்தேகம் காரணமாகவே இந்த சோதனை செய்யப்படுவதாகவும், வருகிற நிருபர் கண்டிப்பாக பதிவேட்டில் விவரம் எழுதிய பிறகுதான் உள்ளே செல்ல வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் - சமந்தா நடித்துள்ள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதால் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. லைகா நிறுவனம் ராஜபக்சேவின் கைக்கூலி என்று கூறி தமிழ் அமைப்புகள், கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த எதிர்ப்புகளை மீறி படத்தை நாங்கள் திரையிட்டே தீருவோம், நாளை மறுநாள் இசை வெளியீடு நடக்கும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தப் பட விஷயத்திலும், ராஜபக்சேவுடனான தொடர்பு குறித்தும் விளக்கம் சொல்ல, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகில் உள்ள தாஜ் ஓட்டலில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த பிரஸ் மீட்டுக்கு வந்த நாளிதழ், இணையதள நிருபர்களை பலத்த சோதனைக்குப் பிறகே பிரஸ்மீட் நடந்த அரங்குக்கு அனுமதித்தனர். நிருபர்கள் என்ற போர்வையில் தமிழ் தீவிரவாதிகள் யாராவது உள்ளே வந்து போராட்டம் செய்துவிடப் போகிறார்கள் என்பதாலேயே இந்த ஏற்பாடு என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பிரஸ் மீட்டுக்கு வந்த அனைவரும் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவேட்டில் எழுதிய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











