அஜித்துக்கு 300 கோடி வியாபாரம் எல்லாம் இல்லை.. யாராவது இருக்காங்களா?.. முக்கிய தலையே இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: அஜித் நடிப்பில் இந்த வருடம் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாகின. இவற்றில் விடாமுயற்சி படுதோல்வியை சந்தித்தது. குட் பேட் அக்லியோ அஜித் ரசிகர்களிடம் மட்டும் அப்ளாஸை அள்ளியது. அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கவிருக்கிறார். ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அஜித் பற்றி பேசியிருக்கிறார்.
ஏகே என்று அழைக்கப்படும் அஜித்குமார் பொதுவாக வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பார். ஆனால் இந்த வருடம் மட்டும்தான் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்தார். கார் ரேஸில் அவரது கவனம் அதிகம் சென்றிருப்பதாலும்; ரேஸில் தனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம்; எனவே திரைப்படங்களுக்கான கமிட்மென்ட்டை முடிக்கவே ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் அவர் நடித்ததாக தெரிகிறது.
இரண்டும் சுமார்தான்: மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இன்னும் சில வருடங்கள் கழித்து அந்தப் படத்தை கொண்டாடுவார்கள் பாருங்கள் என்பது அஜித் ரசிகர்களின் கருத்து. அடுத்து வெளியான குட் பேட் அக்லியோ அஜித் ரசிகர்களை மட்டும்தான் கவர்ந்தது. முக்கியமாக, படம் முழுக்க அஜித்தின் ரீல்ஸ்களை வைத்தே இயக்குநர் ஓட்டிவிட்டார் என்று பெரும்பாலான ரசிகர்களிடமிருந்து கருத்து வந்தது நினைவுகூரத்தக்கது.

கார் ரேஸில் பிஸி: இரண்டு படங்களையும் முடித்த கையோடு அவர் கார் ரேஸுக்கு சென்றுவிட்டார். உலகத்தின் பல நாடுகளில் நடக்கும் ரேஸில் தனது ரேஸிங் டீமோடு களமிறங்கி பந்தயம் அடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எப்படி அவர் தனது தடத்தை ஆழமாக பதித்திருக்கிறாரோ அதேபோல் கார் பந்தயத்திலும் செய்கிறார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரேஸில் பெரும்பான்மையான கவனம் இருந்தாலும் சினிமாவை அவர் விட்டுவிடக்கூடாது என்பதுதான் பலரது எண்ணம்.
அடுத்த படம்: அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியலாகவே உருவாகும் என்று ஆதிக் தெரிவித்திருக்கிறார். இரண்டு பேரும் இணைவது உறுதியாகிவிட்டாலும்; எப்போது ஷூட்டிங், ஹீரோயின் யார், டெக்னீசியன்கள் யார், தயாரிப்பது யார் என பல கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்காமல் இருக்கிறது. அதுமட்டுமின்றி அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுக்க யாரும் முன் வராததால்தான் ஷூட்டிங் தொடங்காததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி: இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசுகையில், "தனக்கு போட்டி இல்லாததால் அஜித்தின் அடுத்த பட ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இல்லை. அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு இங்கே தயாரிப்பாளர்கள் இல்லை. சிலர் 300 கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் 300 கோடி ரூபாய்க்கு வியாபாரம் இருக்கிறதா என்றால் இல்லை. அஜித்துக்கு அவ்வளவு வியாபாரம் இல்லை. தியேட்டர் வியாபாரமோ, சேட்டிலைட் வியாபாரமோ, ஓடிடி வியாபாரமோ, ஆடியோ வியாபாபாரமோ ஒரு வியாபாரமும் கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications











