அப்படீன்னா கபாலி, பைரவா, சி3ல உங்களுக்கு பைசா தேறலையா திருப்பூர் சுப்பிரமணியன்?
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீரப்பன் ஸ்டைலில் வாய்ஸ் மெஸேஜ் அனுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர் திருப்பூர் சுப்பிரமணியம்.
முன்பெல்லாம் அவர் குரல் பதிவுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும், திரையுலகில். பரவாயில்லை.. இவர் ஒருவராவது நியாயமாகப் பேசுகிறாரே என்ற நினைப்பு இருந்தது பலருக்கும். இப்போது அப்படி இல்லை. பெரும் சலிப்பும் சந்தேகமும்தான் மிஞ்சுகிறது, அவருடைய பேச்சுக்களைக் கேட்டால்.

வாயைத் திறந்தாலே நட்டம், சினிமா அழிவுப் பாதையில் போகிறது, அவர் சரியில்லை.. இவர் சரியில்லை, நடிகர்கள் ஏன் அரசியல் பேசுகிறார்கள் என்று ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள். குறிப்பாக ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது.
கபாலி தொடங்கி, சி 3 வரை எந்தப் படமுமே ஓடவில்லை.. நஷ்டம் நஷ்டம், ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம் என்று அந்த 20 நிமிட குரல் பதிவில் திருப்பூர் சுப்பிரமணியம் புலம்பியுள்ளார்.
சி 3 படம் வசூல் சாதனை செய்ததாகக் கூறி, அதன் இயக்குநர் ஹரிக்கு நடிகர் சூர்யா ஒரு கார் பரிசளித்தார். அதையும் கிண்டலடித்து குற்றம் சாட்டியுள்ளார் சுப்பிரமணியன். சி 3 இன்னும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. படத்துக்கான புரமோஷன்.. விளம்பரமாகக் கூட அது இருக்கலாம். ஆனால் அதை ஒரு மூத்த விநியோகஸ்தரே கிண்டலடித்தால், ஓடிக்கொண்டிருக்கும் படத்தை பின்னுக்கு இழுக்கிற முயற்சியல்லவா அது?
இதே திருப்பூர் சுப்பிரமணியன், சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ பட வெற்றி விழாவில் பங்கேற்றார். பலரும் அந்தப் படத்தால் நஷ்டம் என்று கூறி வந்த நிலையில், படம் பெரிய லாபத்தைத் தந்துள்ளது. சிவகார்த்திகேயன் நல்லா இருக்கணும் என்றெல்லாம் மேடையில் வாழ்த்தினார். இன்று அதே திருப்பூர் சுப்பிரமணியன்தான் 'ரெமோ படத்தால் சில இடங்களில் லாபம்.. பெருமளவு நஷ்டம்' என்கிறார்.
அன்று ரெமோ விழாவில் திருப்பூர் சுப்பிரமணியன் பேசியதன் வீடியோவை ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் போட்டு கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
விஜய்யின் பைரவா படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள்தான் வந்தன. ஆனால் அந்தப் படம் வந்தபோது இருந்த அரசியல் சூழல் காரணமாக வேறு படங்களே இல்லை. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் சோலோவாக ஓடியது அந்தப் படம். திருச்சி, தஞ்சை போன்ற ஏரியாக்களே படத்தால் நஷ்டமில்லை.. லாபம்தான் என்று கூறியுள்ளனர்.
சி3 படம் நஷ்டம் என்று யாரும் கூறுவதற்கு முன்பே, திருப்பூர் சுப்பிரமணியம் படம் நஷ்டம் என்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி உண்மையான வசூல் என்ன?
அட குறைந்தபட்சம், என்ன விலைக்கு டிக்கெட் விற்றார்களோ அதில் வந்த உண்மையான வசூலைக் காட்டும் நேர்மை இருக்கிறதா விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும்? ஒவ்வொரு ரஜினி படத்துக்கும் முதல் ஒரு வாரம், பத்துநாள் வரை இரண்டு முதல் பத்து மடங்கு வரை அதிகம் விலை வைத்துதான் டிக்கெட் விற்கிறார்கள். கணக்கு காட்டும்போது, ரூ 10, 30, 50, 70, 90, 120 என்று மட்டும்தான் காட்டுகிறார்கள். கபாலி டிக்கெட்டுகளை ரூ 1000, 500, 250, 200 என்று விற்றார்களே... அந்தப் பணம் எங்கே என்றால், அதாங்க இது என்று வாழைப்பழ காமெடி செய்கிறார்கள். கபாலியின் முதல் நான்கு நாள் டிக்கெட்டுகள் சராசரியாக ரூ 500க்கு விற்கப்பட்டன சென்னை போன்ற நகரங்களில். இந்தப் பணமெல்லாம் யாருக்குப் போனது? தியேட்டர்காரர்களுக்கா... விநியோகஸ்தர்களுக்கா? நேரடியாக தயாரிப்பாளர்களுக்கா?
தியேட்டர் கேன்டீன்களில் ஒவ்வொரு பொருளையும் நான்கு மடங்கு விலைக்கு விற்கிறார்கள். இதில் வரும் லாபம் அந்தப் படத்தின் வருவாயில் சேராதா?
பார்க்கிங் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை எக்கச்சக்கம். அதெல்லாம் என்ன கணக்கில் சேரும்?
ஒரு பக்கம் மெகா வசூல் என்கிறார்கள்... மறுபக்கம், நஷ்டம் நஷ்டம் என்ற புலம்பல். இந்த நேர்மையற்ற நிலைதான் தமிழ் சினிமாவை மரணப் படுக்கைக்கு கொண்டு போகப் போகிறது.
விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இருவருமே இப்போது செய்ய வேண்டியது, நேர்மையான வசூல் கணக்கைக் காட்டுவதுதான். அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் அந்தக் கணக்கையும் காட்டுங்கள். அப்போதுதான் என்ன லாபம் என்று தெரியும்.
இந்த குரல் பதிவில் திருப்பூர் சுப்பிரமணியன் தயாரிப்பாளர்கள் மீது வைத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டு நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்பது. உண்மையில் அதில் நியாயம் உள்ளது. அதை உடனடியாகச் செய்யுங்கள் என்பதுதான் பெரும்பாலான திரையுலகினரின் கருத்தும் கூட (நடிகர்கள் தவிர்த்து).


Click it and Unblock the Notifications











