சினிமாவில் ஜாதி வேண்டாம்... படித்தவர்களுக்குக் கூட மூளை இல்லை... சாடிய திரை பிரபலம்!
சென்னை: கடந்த மாதம் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படம் சமூக நீதி அரசியலை முன்வைத்து உருவாகியிருந்தது.
முன்னதாக மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியதும் சர்ச்சையானது.
இந்நிலையில், சினிமா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் திரைப்படங்களில் ஜாதி வேண்டாம் என பேட்டிக் கொடுத்துள்ளார்.

சினிமாவில் ஜாதி வேண்டாம்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சமூக நீதி அரசியல் பேசும் படமாக வெளியான மாமன்னன், பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து பேசியிருந்ததும் சர்ச்சையானது.
கமல்ஹாசன் முன்னிலையில் மாரி செல்வராஜ் அப்படி பேசியிருக்கக் கூடாது என பலரும் கருத்துத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தை குறிப்பிடாமல் சினிமா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ள அவர், "நான் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று படத்தில் சொல்ல வேண்டியதில்லை. மக்களை மகிழ்விக்கும் படங்களை கொடுங்கள், அது தான் சினிமாவிற்கு முக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, ஜாதி ரீதியான படங்கள் என்கிற பேச்சு சமீபத்தில் தான் அதிகரித்து வருகிறது. 72 வயதான நான் 45 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் தற்போது தான் ஜாதி ரீதியான படங்கள் என்ற பேச்சு அதிகமாகியுள்ளது. நாம் அனைவரும் படித்தவர்கள் தான், அதனால் சினிமாவில் ஜாதியைப் பற்றி பேசுவது சரியில்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு நிறைந்தது துறை. எந்த ஜாதியாக இருந்தாலும் அதனை சினிமாவில் கொண்டு வரவேண்டாம்.
மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பதே கிடையாது, தாழ்த்தப்பட்டவன் என்கிற வார்த்தையையே நான் வெறுக்கிறேன் எனக் கூறியுள்ளார். எல்லோருமே இங்கு சமமானவர்கள் தான், இன்னொரு பக்கம் படித்தவர்களுக்கு கூட மூளை வேலை செய்வது கிடையாது. நான் தாழ்த்தப்பட்டவன் என்கிற வார்த்தையை ஏன் உபயோகிக்க வேண்டும். யாருமே இங்கு தாழ்த்தப்பட்டவன் கிடையாது, எல்லாரும் ஒரே ஜாதி தான், மனிதனாக நினைத்து பழகினால் போதும்.
ஜாதியை பற்றி பேசாமல் மக்களை மகிழ்விக்கும் படங்களை கொடுங்கள், அது தான் சினிமாவிற்கு முக்கியம் என்றுள்ளார். அதேபோல், திரையரங்குகளில் டிக்கெட் விலையை ஏற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது இருக்கிற கட்டணத்திற்கே மக்கள் யாரும் தியேட்டர் வருவதில்லை, எல்லோரும் ஓடிடி பக்கம் போய்க் கொண்டிருக்கிறார்கள். மின் கட்டணம் உட்பட சில வரிகளை குறைத்தாலே போதுமானது. இப்போது ஒரு டிக்கெட்டின் விலை 190 ரூபாய், இதற்கு மேலும் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











