சிவகார்த்திகேயனுக்கு என்று ஸ்பெஷல் இடம் எல்லாம் இல்லை.. அட்டாக் செய்த பிரபலம்
சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். அவருக்கு போட்டியாக கருதப்பட்ட விஜய் சேதுபதியும் தற்போது ஹிந்திவரை சென்றுவிட்டதாலும்; விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாலும் அடுத்த மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனே என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகிறார்கள். அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் திருப்பூர் சுப்ரமணியம் சிவகார்த்திகேயன் குறித்து பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது,
சின்னத்திரையில் போட்டியாளராக கலந்துகொண்டு பிறகு தொகுப்பாளராக வளர்ந்து அதன் பின்னர் ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அவர் அடித்த லூட்டிகளும், டைமிங் காமெடிகளும் மக்கள் மத்தியில் அப்போதே சென்று சேர்ந்துவிட்டன. இதன் காரணமாக சினிமாவில் அறிமுகமாகும்போது ரசிகர்களிடம் எளிதாகவே கனெக்ட் ஆகிவிட்டார் சிவா. இருந்தாலும் பத்து படங்களுக்குள்ளாகவே அவரது திரை பயணம் முடிந்துவிடும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்த சிவகார்த்திகேயன்: ஆனால் அந்த ஆரூடத்தை எல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக இருந்தது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி. நடனம், நடிப்பு என அத்தனையையும் முறையாக கற்றுக்கொண்டு படத்துக்கு படம் உயர்ந்த இடத்துக்கு சென்றார். அதன் காரணமாக விரைவாகவே டாப் 10 நடிகர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். குறிப்பாக டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அதனை பார்த்த பலரும் பலமாகவே ஆச்சரியப்பட்டார்கள்.
அமரன்: வரிசையாக இரண்டு நூறு கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்த சிவாவுக்கு பிரின்ஸ் இடியாக விழுந்தது. அதில் விட்டதை மாவீரன் படத்தில் பிடித்தார். முக்கியமாக மாவீரன் ஆடியோ லான்ச்சில் பேசியிருந்த அவர், பிரின்ஸில் விட்டதை மாவீரனில் பிடித்துவிடுவேன் என்று சூளுரைத்தார். சொன்னபடியே ஹிட்டடித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அடுத்த விஜய்யா?: அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடித்துவருகிறார். இதற்கிடையே நடிகர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். எனவே அடுத்த விஜய் தமிழ் சினிமாவில் யார் என்ற கேள்வியை பலரும் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனின் ரசிகர்களோ, அடுத்த தளபதி எங்கள் எஸ்கே அண்ணாதான். அவர்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறார் என்று சொல்லிவருகிறார்கள்.
ரசிகர்களுடன் சந்திப்பு: சமீபத்தில்கூட தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்தார். அதனைப் பார்த்த திரைத்துறையினர் விஜய்யின் ஃபார்முலாவை அப்படியே ஃபாலோ செய்கிறாரே சிவகார்த்திகேயன் என ஆச்சரியப்பட்டனர். இந்த நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் சிவகார்த்திகேயன் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சிவகார்த்திகேயனின் நிலைமை என்பது சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம் உள்ளிட்டோர் எந்த லெவலில் இருக்கிறார்களோ அந்த லெவல்தான். அவருக்கு என்று ஒரு ஸ்பெஷல் இடம் எல்லாம் இல்லை. விஜய்யின் இடத்தையும் அவர் பிடிக்கவில்லை. பிடிக்கவும் முடியாது. ஏனெனில் விஜய்யின் ரேஞ்ச் என்பது வேறு. ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் இடங்களை உடைக்க முடியாது என்று கிடையாது. அவர்களது உயரத்தை தொட வேண்டும் என்றால் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும். ரசிகர்களை சந்தித்தால் மட்டும் போதாது ரசிகர்களை தாண்டி பொதுமக்களை திரையரங்குக்கு வரவைத்து சந்தோஷமாக படத்தை பார்க்க வைக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications