Tirupur Subramaniam: அடுத்தடுத்து சர்ச்சை... முக்கியப் பொறுப்பில் இருந்து விலகிய திரையுலக பிரபலம்!!
சென்னை: தமிழ்நாடு திரையரங்கம், மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக பதவி வகித்து வந்தவர் திருப்பூர் சுப்ரமணியம்.
திருப்பூரில் உள்ள அவரது ஸ்ரீ சக்தி திரையரங்கில் டைகர் 3 இந்திப் படத்தை காலை 7 மணிக்கு திரையிடப்பட்டது.
அதுகுறித்து விளக்கம் கேட்டு திருப்பூர் சுப்ரமணியத்துக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கம், மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா
தமிழ்நாடு திரையரங்கம், மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இந்தச் சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, அதன் ஸ்பெஷல் ஷோ, பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து அதிரடியான கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார். முக்கியமாக லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தயாரிப்பாளர் லலித் குமார் மோசடி செய்துவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்தார். அதேபோல், லியோ படம் பற்றி அவ்வப்போது அதிரடியாக கமெண்ட்ஸ் செய்து வந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள அவரது ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் காலை 7 மணிக்கு திரையிடப்பட்டது. தீபாவளி ஸ்பெஷலாக தமிழில் வெளியான ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களுக்கே காலை 9 மணி காட்சிக்கே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், டைகர் 3 படத்தை அனுமதி இல்லாமல் திருப்பூர் சுப்ரமணியனுக்கு சொந்தமான திரையரங்கில் காலை 7 மணிக்கு ஸ்க்ரீன் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்தச் சம்பவம் குறித்து திருப்பூர் சுப்ரமணியமிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து அவர், "தீபாவளியன்று தமிழ்நாடு அரசின் சிறப்புக் காட்சிகள் தொடர்பான விதிமுறைகள் இந்திப் படத்துக்கு கிடையாது என நினைத்து காலை சிறப்புக் காட்சியை தனது திரையரங்க ஊழியர்கள் ஒளிபரப்பிவிட்டனர்" என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். அதுதொடர்பான கடிதத்தில் எனது சொந்த வேலை காரணமாக சங்கத் தலைவர் பதவிலியிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











