அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி
சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்காக முதல்வர் பழனிச்சாமி தற்போது 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் பழனிச்சாமி இன்று அளித்துள்ளதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வாக்கு கொடுத்தது போல நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அம்மா அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் துவங்க முதற்கட்டமாக ரூ 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. இச்செய்தியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விழாவில் தென்னிந்திய திரைப்பட துறையை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சினிமா துறையை சார்ந்தவர்களின் சார்பாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ஒரு புது அரங்கம் ஒன்று கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அந்நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே முதல்வர் அறிவித்திருந்தார்.
நிகழ்ச்சி நடந்து முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகியும், இதுவரையில் எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி முதல்வரை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான செக்கை ஆர்.கே.செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
இந்நிலையில் அம்மா அரங்கத்தை ஒட்டி அமைந்துள்ள 15 ஏக்கர் நிலத்தில் திரைத்துறையைச் சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அம்மா அரங்கம் விரைவில் கட்டப்படும் என்றும் மீதியுள்ள நிதிக்கு சில முக்கிய நபர்களிடமும், சினிமா துறையை சார்ந்தவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











