ஓமிக்ரான் பரவல் முதல்வர் ஆலோசனை... மீண்டும் வருகிறதா திரையரங்கு கட்டுப்பாடு?
சென்னை : இந்திய அளவில் ஓமிக்ரான் புதிதாக பரவி வருகிறது. இதுவரை 250க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் ஓமிக்ரான் பாதிப்பு உள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவால் திரையரங்கு, படப்பிடிப்புகள் நடத்த ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்வு
செய்யப்பட்டுள்ள நிலையில், ஓமிக்ரான் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்புகள்
கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் சொல்லில் அடங்காதது. உலக மக்கள் அனைவரும் மிகவும் மோசமான பாதிப்புகளை கொரோனாவால் சந்தித்தனர். உயிரிழப்புகளும் அதிகமான அளவில் இருந்த நிலையில், விமான சேவைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன.

கட்டுப்பாடுகள் தளர்வு
இந்நிலையில் கொரோனாவின் 3வது அலை எதிர்பார்த்த அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்திய அளவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை தளர்த்தப்பட்டுள்ளன.

திரையரங்குகள் மூடல்
குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்ப்டடிருந்தன. திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டன. படப்பிடிப்புகள் நடத்த தடைவிதிக்கப்பட்டன.

திறக்கப்பட்ட திரையரங்குகள்
இந்நிலையில் கொரோனா 3வது அலை ஓரளவிற்கு மட்டுப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்புகள் நடத்தவும் 100 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டன. இதையடுத்து ரிலீசாகாமல் முடங்கிய படங்கள் திரையரங்குகளில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

ஓமிக்ரான் பரவல்
இதனிடையே தற்போது ஓமிக்ரான் இந்திய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. உலக அளவில் இந்த வைரஸ் ஒரே வாரத்தில் பரவியுள்ளது. கொரோனா பாதித்து மீண்டவர்களை இந்த வைரஸ் எளிதாக தாக்கும் என்று டபள்யூஎச்ஓ எச்சரித்துள்ளது.

250 பேருக்கு பரவல்
இந்திய அளவில் இதுவரை 250க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஆலோசனை
இந்திய அளவில் பரவிவரும் இந்த வைரஸ் குறித்து மத்திய அரசும் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழக முதல்வரும் இந்த வைரஸ் பரவல் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனிடையே அதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

திரையரங்குகள் மூடல்?
இதையடுத்து தற்போது 100 சதவிகித பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டு வரும் திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களாக குறைக்கப்படுமா அல்லது மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் படப்பிடிப்புகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











