விவேக், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விஜயகுமார் மீது கமிஷனரிடம் புகார்

Vivek, Sathyaraj and Vijayakumar
சென்னை: பத்திரிகையாளர்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் திட்டிய நடிகர்கள் விவேக், விஜய்குமார், சத்யராஜ், மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

விபச்சாரம் செய்யும் நடிகைகள் என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட ஒரு செய்திக்காக, நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் அதன் செய்தி ஆசிரியர் லெனின், பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் நாளிதழுக்கு கண்டனக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு, அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சகட்டு மேனிக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர் கண்டனக் கூட்டத்துக்கு வந்த நடிகர் நடிகைகள்.

நடிகர் சூர்யா, ஒட்டு மொத்தப் பத்திரிகையாளர்களையும் ஆபாசத்தை விற்று வயிற்றைக் கழுவுபவர்கள் என்றதோடு, கடும் வார்த்தைகளைப் பிரயோகித்து கண்டனம் தெரிவித்தார்.

இயக்குநர் சேரன் பேசும்போது, தினமலர் தவிர மேலும் சில பத்திரிகைகளின் பெயர்களைச் சொல்லி கடுமையாகத் திட்டினார். அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பொத்தாம் பொதுவாக ராஸ்கல்ஸ் என்றும் மேலும் சில கேவலமான சொற்களையும் பிரயோகப்படுத்தி திட்டினார்.

ஸ்ரீபிரியா மற்றும் விவேக் இருவரும் ஆபாச வார்த்தைப் பிரயோகத்தின் உச்சத்துக்கே சென்றனர். பத்திரிக்கையாளர்கள் வீட்டு ஆயா முதல் மனைவி, மகள்கள் வரை அனைவரையும் மிகவும் ஆபாசமாக திட்டிப் பேசினார்.

இவை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்த செய்தியாளர்கள் இன்றைய பத்திரிகையாளர் கண்டனக் கூட்டத்தில் அதைப் போட்டுக் காட்டினர்.

அந்த காட்சிகளையெல்லாம் பார்த்து கொதித்துப் போனார்கள் பத்திரிகையாளர்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், நடிகர் நடிகைகளுக்கு எதிராக தன்னிடம் உள்ள ஆதாரங்களைத் தருவதாகக் கூறியதோடு, மிகவும் ஆவேசமாக திரைத் துறையினர் மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டித்துப் பேசினார்.

தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகள், இணையதளங்கள், டிவி சேனல்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் குவிந்திருந்தனர்.

சாலை மறியல்..

மேலும் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரில் அனைத்துப் பத்திரிகையாளர்களும் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்க, ஆடிப் போனது மாநகர காவல்துறை.

பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பேசிய அனைத்து நடிகர்களையும் கைது செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என பத்திரிகையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் வந்து கெஞ்சியும் கூட, போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.

பின்னர் மாநகர துணைக் கமிஷனர் கேட்டுக் கொண்டதன் பேரில் கமிஷனரிடம் புகார் தருவதென்று முடிவானது.

கமிஷனரிடம் புகார்...

இதனைத் தொடர்ந்து ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் குழு, நடிகர்கள் விவேக், சத்யராஜ், விஜயக்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி மனு அளிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் லெனினைக் கைது செய்வதில் காட்டிய வேகத்தை, இந்த பத்திரிகையாளர்கள் புகார் மனு குறித்த நடவடிக்கையிலும் காட்ட வேண்டும் என்று உறுதியாகக் கூறினர் அனைத்துப் பத்திரிகை அமைப்புகளின் பிரதிநிதிகளும். தங்கள் புகாருக்கான வீடியோ ஆதாரத்தினையும் உடன் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய ஆணையர் ராஜேந்திரன், செய்தி ஆசிரியர் லெனின் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தை பிரயோகப்படுத்த முகாந்திரம் இருந்தால், அதே சட்டம் இந்த நடிக, நடிகையர் மீதும் பிரயோகப்படுத்தப்படும். அதில் எந்த மாறுதலும் இல்லை என்று உறுதியளித்தார்.

கைதாவார்களா...?

இதைத் தொடர்ந்து மேற்கண்ட நான்கு நடிகர், நடிகையரும் கைதாவார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X