சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்! - எச் வசந்த குமார் கோரிக்கை
சென்னை: நடிகர் திலகம் மறைந்த சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று எச் வசந்த குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனைகளை யாரும் மறுக்க முடியாது. கலைத் துறையில் மட்டுமல்ல, தேசிய நலனில் அக்கறை கொண்டவர், தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பியவர்.

தேசிய தலைவர்களான வீரர் பகத்சிங், லோகமானிய பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், திருப்பூர் குமரன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றினை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்.
தமிழகம் எங்கும் காமராஜர் புகழ் பாடி தேசிய உணர்வினை வளர்த்தவர். கலைத்துறையிலும், தேசிய நலனிலும் அக்கறையோடு பாடுபட்ட சிவாஜி கணேசனை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











