மும்பை மாவீரர்களுக்கு நாளை சென்னையில் நடிகர்கள் அஞ்சலி!

சென்னை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் வீரப்போர் புரிந்து உயிரிழந்த வீரர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மலரஞ்சலி செலுத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் உள்ள தேவர் திரையரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் ராதாரவி முன்னிலை வகித்தார்.
கடந்த மாதம் 1ம் தேதி இலங்கை தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்திய அனைத்து நடிகர், நடிகையர், திரையுலகை சார்ந்த சங்கங்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் வெளிநாட்டில் இருப்பதால் இந்கதக் கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. எனவே அவரது ஒப்புதலோடு, ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம்:
மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் தேச ஒற்றுமையைக் காக்க, தேச மக்களை காக்க போராடி வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிகள், என்எஸ்ஜி வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், ஹோம் கார்ட்ஸ் அனைவருக்கும் 2&ந் தேதி (நாளை) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது, உயிரிழந்த நம்நாட்டு, வெளிநாட்டு அப்பாவி மக்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதாக இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இதில் நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் திரையுலகின் அனைத்து அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அஞ்சலியில் கலந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











