கொரோன எதிரொலி.. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை.. பழைய படங்களையே வைத்து ஓட்டும் தியேட்டர்ஸ்!
சென்னை: புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத காரணத்தில் தமிழக திரையரங்குகள் பழைய படங்களை ஓட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா காரணமாக உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

50% பார்வையாளர்கள்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திரையரங்குகளில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய படங்கள் ரிலீஸ் இல்லை
மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இம்மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தள்ளி வைப்பு
இதேபோல் இம்மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர், கோடியில் ஒருவன், லாபம் ஆகிய படங்களின் ரிலீஸும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பழைய படங்கள்
இந்நிலையில் நேற்று விர்ட்சுவல் மீட்டிங் நடத்திய திரையரங்க உரிமையாளர்கள், புதிய படங்களின் ரிலீஸ் இல்லாததால் ஏற்கனவே ரிலீஸ் ஆன பழைய படங்களை ஓட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான், எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் தெலுங்கு டப்பிங் படங்களை ஓட்ட முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











