Varisu vs Thunivu - வாரிசு Vs துணிவு..மாபெரும் திரை போர் நடைபெற்று ஒரு வருடம் நிறைவு..ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்
சென்னை: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த வாரிசு படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. பல வருடங்களுக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் கடந்த வருடம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் பிரபலமானவர்களாக இருப்பவர்கள் விஜய்யும், அஜித்தும். இரண்டு பேருமே ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில்தான் நடிக்க வந்தார்கள். விஜய்க்கு அவரது தந்தையின் துணை இருக்க; அஜித்துக்கு தன்னம்பிக்கை இருந்தது. ஆரம்பத்தில் இரண்டு பேரும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு நேருக்கு நேர் படத்தில் நடித்தனர். ஆனால் தயாரிப்பு தரப்புக்கும்ம், அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார் அஜித். இதனையடுத்து இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவில்லை.

தனி சாம்ராஜ்ஜியம்: இரண்டு பேரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் வியாபாரத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. 90களில் படிப்படியாக வளர ஆரம்பித்த அவர்கள் 2000களில் தங்களுக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் Vs அஜித் ரசிகர்கள் என்ற நிலை உருவானது. ஆரம்பத்தில் தரையில் நடந்துகொண்டிருந்த பிறகு சமூக வலைதளங்களில் சண்டையிட தொடங்கினர்.
ஒரே நாளில் ரிலீஸ்: விஜய் படமும், அஜித் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் அன்றைய தினம் திருவிழா போல் இருக்கும். மேலும் இரண்டு படங்களில் எந்தப் படம் அதிக வசூல் செய்திருக்கிறது என்ற விவாதமும் களைகட்டும். அப்படித்தான் விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் கடந்த வருடம் இதே நாளில் ரிலீஸானது. அதற்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ஜில்லா திரைப்படமும், வீரம் திரைப்படமும் வெளியானது. அதில் வீரம் திரைப்படம் வெற்றி பெற்றதாகவே ரசிகர்களின் பரவலான கருத்தாக இருக்கிறது.
வாரிசு Vs துணிவு: கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு வாரிசு, துணிவு படம் ஒரே நாளில் வெளியானது. வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார். தெலுங்கில் ஃபேமஸான இயக்குநர் என்பதாலும், தமிழில் அவர் இயக்கிய தோழா திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியிருந்ததாலும் வாரிசு படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
ஃபேமிலி ட்ராமாவாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் திரைக்கதையில் சொதப்பிவிட்டதாகவும், மேக்கிங் படு திராபையாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். முக்கியமாக விஜய்யின் கெட் அப்பும், நடிப்பும்கூட கடுமையான ட்ரோல்களை சந்தித்தன. இப்படி ஒரு கருத்து எழுந்திருந்தாலும் வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருக்கிறது.
ரியல் பொங்கல் வின்னர்: இது ஒருபக்கம் இருக்க அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் வங்கிக்கொள்ளையையும், வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையையு மையப்படுத்தி ஹெச்.வினோத் படத்தை இயக்கியிருந்தார். மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட் என்பதற்கேற்ப படமும் சூப்பர் ஹிட்டடித்தது. பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருந்ததாலும்; அஜித்தின் கெட் அப் மற்றும் நடிப்பு ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்திருந்ததாலும் படம் வரவேற்பை பெற்றது. அதேசமயம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி கடுமையான ட்ரோலை சந்தித்தது. இருந்தாலும் படம் 300 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது. மேலும் ரியல் பொங்கல் வின்னர் என்றும் தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











