அவங்க அழகுல தான் மயங்கிட்டேன்... மீண்டும் சர்ச்சையில் பாலய்யா... இவரு திருந்தவே மாட்டாரா...?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது.
பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹனி ரோஸ் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் பழம்பெரும் நடிகர்கள் குறித்து பாலகிருஷ்ணா பேசிய கருத்துகள் சர்ச்சையானது.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் பாலய்யா.

வீர சிம்ஹா ரெட்டி
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த மாதம் 14ம் தேதி பாலய்யா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியாகியிருந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தில், பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் நடித்திருந்தனர், கோபிசந்த் மலினேனி இயக்கியிருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, டோலிவுட் பாக்ஸ் ஆபிஸையும் தெறிக்கவிட்டது.

சர்ச்சை மேல் சர்ச்சை
இந்நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய பாலய்யா, தன் தந்தை என்.டி.ராமராவின் காலத்தைச் சேர்ந்த சக நடிகர்களை கிண்டல் செய்தார். அதாவது பழம்பெரும் முன்னணி நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ், ரங்கா ராவ் ஆகிய இருவரையும் மரியாதை குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. "என் தந்தை என்.டி.ஆருடன் சில நடிகர்கள் இருந்தனர். அந்த ரங்காராவ், அக்கினேனி, தொக்கினேனி..." என பேசியிருந்தார். இது தெலுங்கு திரையுலகில் மிகவும் சர்ச்சையானது.

நர்ஸ்கள் குறித்து பேச்சு
இதனையடுத்து தங்கள் தாத்தாவான அக்கினேனி நாகேஸ்வர ராவை அவமானப்படுத்திய பாலகிருஷ்ணாவுக்கு, நாகார்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யா, அகில் இருவரும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்த பாலய்யா, நான் அப்படி பேசவில்லை, அக்கினேனி எனக்கு சித்தப்பா மாதிரி எனக் கூறி ஜகா வாங்கினார். இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் உள்ள நர்ஸ்கள் பற்றி பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாலய்யா.

மன்னிப்பு கேட்ட பாலய்யா
ஒருமுறை காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற பாலய்யா, அதன்பிறகு தனக்கு காயம் ஏதும் இல்லை, சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவர்களிடம் கூறினாராம். ஆனால், அங்கிருந்த அழகான நர்ஸை பார்த்ததும் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக பாலய்யா தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள் சங்கங்கள் பாலயாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன பாலய்யா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் சொன்னதன் அர்த்தம் முற்றிலும் திரிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல், தான் பேசியது நர்ஸ்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அடிக்கடி இப்படி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பாலய்யா திருந்தவே மாட்டாரா என நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











