Andhagan: பாலாபிஷேகம்.. 1000 வாலா வெடி.. ரிலீஸ் ஆன அந்தகன்.. ரசிகர்களுடன் படம் பார்த்த பிரசாந்த்!
சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இன்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது. அதன் பின்னர் படக்குழு தரப்பில் இருந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ரிலீஸான அந்தகன் படத்தினை படத்தின் நடிகர் பிரசாந்த் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

அந்தாதுன் 2018ஆம் ஆண்டு வெளியான படம். இந்த படம் முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் சஸ்பென்ஸ் படமாக வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றப் படம். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். மேலும், இதுவரை உலக சினிமா வரலாற்றில் அதிகம் பாராட்டப்பட்ட க்ரைம் த்ரில்லர் படம் என்றால் அது, இன்விஷிபில் கெஸ்ட். இந்த படத்தைப் போல் இந்தியாவில் ஒரு படம் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு சிறப்பான விடையாக அமைந்த படம்தான் அந்தாதுன். அந்தாதுன் படத்தின் முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னர் தொடங்கும் விறுவிறுப்பான காட்சிகள் அதன் பின்னர் படத்தின் க்ளைமேக்ஸ் வரைக்கும் சலிப்புத் தட்டாமல் இருந்ததுதான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம்.

50வது படம்: இந்த படம் டாப் ஸ்டார் பிரசாந்த்தின் 50வது படம். இந்த படத்தினை அவரது தந்தையும் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். தனது மகனின் 50வது படத்தினை மாபெரும் வெற்றிப் படமாக அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் தியாகராஜன் கடும் போட்டிகளுக்கு மத்தியில் அந்தாதுன் படத்தின் உரிமைகளை வாங்கி, ரீ மேக் செய்துள்ளார். இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் பிரசாந்த் இந்த படம் ரி -மேக் என்பதை விட ரீ-க்ரியேட் என்பதுதான் சரியாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.

பியானோ கலைஞர்: இந்த படத்தின் கதாநாயகன் ஒரு பியானோ கலைஞர் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளி. பிரசாந்த் சிறுவயதிலேயே பியானோ முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார். இதனால் அந்தாதுன் படத்தின் கதையில் பிரசாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்ததால்தான் அந்தப் படத்தின் உரிமைகளை வாங்கியதாக, தியாகராஜன் கூறியிருந்தார்.
ரசிகர்களுடன் பிரசாந்த்: இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை ரசிகர்களுடன் காண நடிகர் பிரசாந்த் மற்றும் படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு வந்துள்ளனர். நடிகர் பிரசாந்த் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் அந்தகன் படத்தின் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். மேலும் தியேட்டர் வாசலில் 1000 வாலா வெடி வைத்து கொண்டாடினர். அதேபோல் ட்ரம்ஸ் வாசித்து ஆட்டம் ஆடினர்.


Click it and Unblock the Notifications











