Tourist Family: 'சின்ன பையன்' சசிகுமார் சொன்ன வார்த்தை.. பிரஸ் மீட்டில் அழுத டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்
சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகி, நாளை வெளியாகவுள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படக்குழு படத்தை ஊடகத்தினருக்கு ஏற்கனவே திரையிட்டுவிட்டதால், படம் குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அழுது கொண்டு, எமோஷனலாக பேசினார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதற்கட்ட அறிவிப்பில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் தம்பதிகளாக நடிக்கிறார்கள் எனும்போது, இந்த படம் பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அயோத்தி படத்தில் இருந்து சசிகுமார் தேர்வு செய்யும் கதைகள் பாராட்டுகள் குவித்து வருகிறது. அயோத்தி, கருடன், நந்தன் என இவர் நடிக்கும் படங்கள் மொத்தமாகவே, தமிழ் சினிமாவை பெருமை கொள்ள வைக்கும் படங்களாக உள்ளன.

அந்த வரிசையில் இவர் நடித்துள்ள படம் தான் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தில் இலங்கை தமிழராக நடித்துள்ள இவர். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த குடும்பத்தின் தலைவராக நடித்துள்ளார். படம் பார்த்தவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தை ரிலீஸ்க்கு முன்னர் திரையிட்டனர்.
எமோஷனல்: அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய, இயக்குநர் அபிஷன் ஜீவந்த் அழுது கொண்டே பேசினார். அதாவது அவர் பேசும்போது, " டூரிஸ்ட் பேமிலி படத்தின் பிரஸ் ஷோ இப்போதுதான் முடிந்தது. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இவ்வளவு நாட்களாக நாங்கள் இந்த ஒரு நாளுக்காக தான் காத்திருந்தோம். எல்லா காட்சிகளுமே நன்றாக ஒர்க்- அவுட் ஆகியுள்ளது. உங்களிடத்தில் இருந்து இவ்வளவு வரவேற்பு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிளைமாக்ஸ், அதற்கு முன்னர் இருந்த நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்தும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நன்றிகள். படத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேருங்கள் என அழுது கொண்டு எமோஷனலாக பேசினார்.

சசிகுமார் : அதன் பின்னர் பேசிய நடிகர் சசிகுமார், " இது அவருக்கு முதல் படம். முதல் படத்தில் என்னையும் கேட்டிருந்தால் நானும் அழுதிருப்பேன். எனக்கே இப்போது கண் கலங்குகின்றது. இந்த படம் கட்டாயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். நீங்கள், எப்படி கைதட்டி இந்த படத்தை ரசித்துப் பார்த்தீர்களோ அதேபோல் மக்களும் பார்ப்பார்கள் என நம்புகிறோம். அபி ( இயக்குநர்) இனிமேல் அதிகம் எமோஷனல் ஆக வேண்டி இருக்கும். இது அவரது முதல் படம். 24 வயது இளைஞன் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் அவரைத் தேர்வு செய்துள்ளார். ஒரு சின்ன பையன், வயது முக்கியமில்லை, கதைதான் முக்கியம் என திறமையை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லா நாடுகளிலும் பார்த்து ஆதரிப்பார்கள் என நினைக்கிறேன். இது அனைவருக்குமான படம்" என சசிகுமார் பேசினார். அவர்கள் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











