Bike Taxi Paavangal: பைக் டாக்சி பாவங்கள்.. கமெண்ட்டில் கண்ணீரைக் கொட்டிய திருநங்கை.. என்ன ஆச்சு?
சென்னை: தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் நடத்தி வரும் யூடியூப் சேனல்களில் கிட்டத்தட்ட 60 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனலாக இருப்பது, கோபி மற்றும் சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனல்தான். இவர்கள் தங்களது யூடியூப் சேனலில் சமூகத்தில் நடைபெறும் சம்பவங்கள், மக்களை பாதித்த, பாதிக்கின்ற விஷயங்கள் குறித்து, நையாண்டியாகவும், சில நேரங்களில் அரசியல் நையாண்டியாகவும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவது மட்டும் இல்லாமல், இணைவாசிகள் மத்தியில் விவாதத்தையும் அவ்வப்போது ஏற்படுத்திவிடுகின்றது. அந்த வகையில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் நேற்று அதாவது, டிசம்பர் 14ஆம் தேதி பைக் டேக்சி பாவங்கள் என்ற பெயரில், வீடியோ வெளியிட்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் கமெண்ட்டில் திருநங்கை ஒருவர் பைக் டேக்சி மூலம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

கடந்த வாரத்தில் தலைநகர் சென்னையில், ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். அதில், பைக் டேக்சி ஓட்டுவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றனர். மேலும் சில ஆட்டோ ஓட்டுநர்களோ, பைக் டேக்சியில் கணவனே, மனைவியை இன்னொரு நபருடன் பைக்கில் ஏற்றி விடுகின்றான்... பைக் டேக்சியில் போகும்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுமட்டும் இல்லாமல் பைக் டேக்சியில் போகும்போது, பிரேக் பிடித்தால் பைக் ஓட்டுபவரின் மேல் பெண்கள் மோதுகின்றார்கள். பைக் டேக்சியில் போகும்போது, பைக் ஓட்டுபவரை பெண்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு போகின்றார்கள்" என அபத்தமான முறையிலும் பேசினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

ஆட்டோ ஓட்டுநர்கள்: இது, ஆட்டோ ஓட்டுநர்கள் மீதான மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. மேலும் பொதுமக்கள் பலரும் ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்த தொலைவுக்கு அதிக பணம் கேட்கின்றார்கள் எனவும், மும்பை போல் இங்கு ஏன் மீட்டருக்கு இவ்வளவு என வசூலிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதேநேரத்தில் பை டாக்சிகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டது.

பைக் டாக்சி பாவங்கள்: இது தொடர்பாக, பரிதாபங்கள் யூடியூப் சேனலில், பைக் டாக்சி பாவங்கள் என்ற பெயரில், 14 நிமிடங்களுக்கு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நையாண்டி செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், பைக் டாக்சி ஓட்டுபவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், பைக் டாக்சி மற்றும் ஆட்டோவில் பயணிப்பவர்கள் என பலரது கோணத்தை நையாண்டியாக அதேநேரத்தில் சமூக அக்கறையோடு, அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ, மற்றும் இந்த வீடியோவின் சில துணுக்களை வெட்டி இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

திருநங்கை கமெண்ட்: இந்த வீடியோவின் கமெண்ட்டில், திருநங்கை ஒருவர் பைக் டாக்சி தொடர்பாக தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, " நான் திருநங்கை.. எந்த வேலையும் கிடைக்கலனு பைக் டாக்சி ஓட்டுனேன்..நான் திருநங்கை னு தெரிஞ்சதும் ஆர்டர் கேன்சல் பண்ணுவாங்க மதுரை மக்கள்..அடுத்த ஆர்டர் வரும்னு ரோட்ல நின்னா போலீஸ் காரங்க தேவையில்லாத கேள்வி கேட்பாங்க...வந்தாரை வாழ வைக்கற மதுரை என்னை வாழ விடலை.. ஆட்டோ காரங்க கஷ்டத்த பார்த்து பைக் டாக்சி ஓட்டறத விட்டுட்டேன்..இப்ப மானிய ஆட்டோக்கு விண்ணப்பித்து இருக்கேன்..வாழ விடறாங்களா? பார்ப்போம்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இவரது பதிவுக்கு இணையவாசிகள் பலரும், அந்த திருநங்கைக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











