கஞ்சா வியாபாரியா? இதுக்கு மேல அவனை சும்மாவிட மாட்டேன்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த வைஷூ!
சென்னை: காமெடி நடிகரான நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை வி.ஜே.வைசுவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பணப் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட மோதல்கள் நீடித்து வருகின்றன. ஏற்கனவே இவர்களுக்குள் பஞ்சாயத்துக்கள் வெடித்த நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜயனுக்கு எதிராக வி.ஜே.வைசு மீண்டும் ஒரு புதிய புகாரை அளித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வி.ஜே.வைசு, நாஞ்சில் விஜயனை எனக்கு கடந்த 16 வருடங்களாகத் தெரியும். அவனுடன் நான் 7 வருடங்கள் குடும்பம் நடத்தி இருக்கிறேன். அவன் ஒரு பக்கா ஃபிராடு. மீடியாவிற்கு முன்னால் அவன் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசுவான், நன்றாக நடிப்பான். அவன் என்னிடம் வாங்கிய 3 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டான். இதற்கு முன்பு காதல் கத்திரிக்காய் என்று அந்தப் பணமே வேண்டாம் என்றுதான் நான் முடிவு செய்திருந்தேன். ஆனால், இப்போது சூர்யா தேவி விவகாரத்தில் என்னை வம்புக்கு இழுக்கிறான். என்னிடம் வாங்கியது போலத்தான் சூர்யா தேவியிடமும் அவன் பணத்தை வாங்கி ஏமாற்றி இருப்பான். இப்போது சூர்யா தேவி பணத்தைக் கேட்பதற்கு நான் தான் காரணம் என்கிறான்.

கஞ்சா வியாபாரியா?: என்னையும் சூர்யா தேவியையும் கஞ்சா வியாபாரி என்று நாஞ்சில் விஜயன் சொல்லியிருக்கிறான். அதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கும் எனக்கு எதற்கு இந்த அவப்பெயர்? இதற்காக நாஞ்சில் விஜயன் கண்டிப்பாக என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். அவன் என்னை மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசிய ஆடியோ ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது. நான் 15 வருடமாகச் சினிமா துறையில் இருக்கிறேன். ஒரு திருநங்கையாக இருந்தால் பாலியல் தொழில் செய்ய வேண்டும் அல்லது பிச்சை எடுக்க வேண்டும் என்றுதான் இந்தச் சமுதாயம் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நான் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு வரும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

சும்மா விடமாட்டேன்: ஆனால் நாஞ்சில் விஜயனோ, நீ எந்த இடத்திற்கு நடிக்கும் வாய்ப்பு தேடிச் சென்றாலும், உன்னை வாசலிலேயே துரத்திவிடும் அளவிற்கு நான் செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். அதுமட்டுமில்லாமல், என் வீட்டுக்கே வந்து இந்த ஏரியாவில் உன்னை இருக்க விடமாட்டேன் என்றும் ஆட்களை வைத்து மிரட்டுகிறான். இதெல்லாம் ஒரு ஆணுக்கு அழகா? இந்த முறை அவனை நான் சும்மா விடமாட்டேன். அவன் மன்னிப்பு கேட்க வேண்டும், அதோடு நான் கொடுத்த 3 லட்சம் பணத்தையும் திருப்பித் தர வேண்டும். அதற்காகத்தான் மீண்டும் சட்டப்படியாகப் புகார் கொடுத்துள்ளேன் என்று வைசு ஆவேசமாகப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications