Actress Trisha: மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்.. காவல்துறைக்கு திரிஷா கடிதம்!
சென்னை: நடிகை திரிஷா அடுத்தடுத்த வெற்றிப்பட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த லியோ படம் வெளியானது.
இந்தப் படத்தில் விஜய் மற்றும் திரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்திருந்தனர். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி பேசப்பட்டது.
இந்நிலையில் திரிஷா குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்த திரிஷாவின் திரைப்பயணத்தில் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வருகிறார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்திருந்த லியோ படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
லியோ படம்: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றுள்ளது. லியோ படத்தில் விஜய் -திரிஷாவின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவர்களின் லிப்லாக் காட்சிகளும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடனும் விடாமுயற்சி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா.
அஜித்துடன் ஜோடி சேர்ந்த திரிஷா: இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கி முதல் கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அங்கிருந்தபடி திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமான ரசிகர்களின் லைக்ஸ்களையும் பெற்றது. இந்நிலையில் அசர்பைஜானில் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்ததையடுத்து தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் டிசம்பர் 2வது வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளது.
மன்சூர் மோசமான கருத்து: கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்த மோசமான கருத்துக்களை பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்த பேச்சுக்கு திரிஷாவும் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட்டை சேர்ந்த நடிகர்களும் திரிஷாவிற்கு ஆதரவாக பேசினர். முன்னதாக தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய மன்சூர் அலிகான், தன்மீதான கண்டனங்கள் மற்றும் போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார்.
திரிஷா கோரிக்கை: முன்னதாக மன்சூர் அலிகானிடம் விசாரணை மேற்கொள்ள அவரை நேரில் ஆஜராகக் கூறி காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று நடிகை திரிஷா தற்போது காவல்துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு அவருக்கு போலீசார் அனுப்பிய கடிதத்திற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்தான் மன்சூர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட மன்சூர்: திரிஷா குறித்து பொதுவெளியில் மோசமான கருத்துக்களை பேசியிருந்தார் மன்சூர் அலிகான். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டு பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான மன்சூர் அலிகான், தன்னுடைய பேச்சிற்காக விளக்கம் அளித்ததுடன் மறுநாள் காலை இந்த விவகாரத்தில் மன்னிப்பும் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











