Trisha: தொடர்ந்து அமைதி காக்கும் சூர்யா.. அமீரை தொடர்ந்து நன்றி சொன்ன த்ரிஷா.. தீயாக பரவும் வீடியோ
சென்னை: அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது அஜர்பைஜானில் நடைபெறும் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் த்ரிஷா நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன த்ரிஷா
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு மனைவியாக த்ரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லியோ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதேபோல், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மாஸ் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சியை தொடர்ந்து கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார் த்ரிஷா. 2002ம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. அமீர் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இயக்குநர் அமீர், த்ரிஷா இருவருக்குமே மெளனம் பேசியதே தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சில விளம்பரங்களில் நடித்துள்ள த்ரிஷா, ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரேயொரு காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில், மெளனம் பேசியதே வெளியாகி 21 ஆண்டுகள் ஆனதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் த்ரிஷா. "இந்த நாளை இனிய நாளாக்கிய ரசிகர்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள். உங்கள் ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து வேண்டுகிறேன்" என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
த்ரிஷா நன்றி தெரிவித்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக இயக்குநர் அமீரும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும் அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது நான் சோர்ந்து விடாமலும், துவண்டு விழாமலும் பார்த்துக்கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்கு அளித்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்திருந்தார்.
மேலும், மெளனம் பேசியதே படத்தில் நடித்த, பணியாற்றிய சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, யுவன் போன்ற அனைத்து தொழிநுட்ப கலைஞர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரை சூர்யா மட்டும் நன்றி சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது மெளனம் பேசியதே. அதேநேரம் பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா அமைதியாக இருப்பதும் சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











