முதலில் விஜய், அஜித்... இப்போ கமல்: விஸ்வரூபமெடுக்கும் த்ரிஷா... அதிர்ச்சியில் இளம் நடிகைகள்!
சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்திருந்த த்ரிஷாவுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
நீண்ட இடவேளைக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படம் மூலம் கம்பேக் கொடுத்த த்ரிஷா, தற்போது மீண்டும் நடிப்பில் பிஸியாக காணப்படுகிறார்.
விஜய்யின் தளபதி 67, அஜித்தின் ஏகே 62 ஆகிய படங்களில் த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ரசிகர்களின் குந்தவை
மெளனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகையாக 20 ஆண்டுகளை கடந்துள்ள த்ரிஷா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பொன்னியின் செல்வனில் நடித்த த்ரிஷாவுக்கு, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. குந்தவை கேரக்டரில் த்ரிஷாவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.

விஜய், அஜித்துடன் ஜோடி
பொன்னியின் செல்வன் படம் கொடுத்த தரமான கம்பேக்கால், த்ரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இதனால் த்ரிஷாவின் கால்ஷீட் மீண்டும் பிஸியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. முதலில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67ல் த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அஜித்தின் ஏகே 62 படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன. அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களிலும் த்ரிஷா நாயகியாக நடிப்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா?
இதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுடனும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ள கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல். 2023ல் படப்பிடிப்பை தொடங்கி, 2024ம் ஆண்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் தான் கமலுடன் த்ரிஷா ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிர்ச்சியில் இளம் நடிகைகள்
மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே ஆயுத எழுத்து, இப்போது பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, இந்தப் படம் மூலம் மூன்றாவது முறையாக இணையலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல் கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் த்ரிஷா நடித்திருந்தார். தற்போது இது கமலுடனும் த்ரிஷாவுக்கு 3வது திரைப்படமாக அமையும் என பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன. சில வருடங்களாக முன்னணி ஹீரோக்களுடன் நடிக்காமல், சின்ன பட்ஜெட் படங்களில் மட்டும் நடித்து வந்தார் த்ரிஷா. மேலும் த்ரிஷாவின் மார்க்கெட் காலி என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து த்ரிஷாவின் மார்க்கெட் நிலவரத்தை பார்த்து, இளம் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











