சோதனை மேல் சோதனை: நயன்தாரா படத்தை ரிலீஸ் செய்ய ஹைகோர்ட் தடை
Recommended Video
சென்னை: நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே கொலையுதிர் காலம் என்பது தன் தலைப்பு என்று கூறி பாலாஜி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கொலையுதிர் காலம் படம் பல பிரச்சனைகளில் சிக்கி வெளிவருமா என்பதே பெரும் சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் தான் படத்தின் தயாரிப்பாளர் மாறி ஒரு வகையாக ரிலீஸ் வேலைகளை துவங்கினர்.
இந்நிலையில் பாலாஜி குமார் மூலம் இப்படி ஒரு பிரச்சனை வந்து நிற்கிறது. முன்னதாக கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு நயன்தாராவை பற்றி விமர்சித்தது பெரும் பிரச்சனையாக மாறியது. அதை பார்த்த விக்னேஷ் சிவனோ, கை விடப்பட்ட படத்திற்கு எதற்காக ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடத்துகிறார்கள் என்றே புரியவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
கைவிடப்பட்டது என்று சொன்ன படம் ரிலீஸுக்கு வருகிறதே என்று நினைத்தபோது தலைப்பு பிரச்சனையால் தடை வந்துள்ளது. பிரச்சனை தீர்ந்து படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
படத்தின் ஹீரோவும், ஹீரோயினுமான நயன்தாராவோ தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











